Saturday, February 16, 2013
ஆராதனா எனும் பேய் 37
வம்படியாக
ரயில் காமித்துத் தருவதாக
கூட்டிப்போன அப்பாவிடம்
ரயில் வாங்கித் தரச்சொல்லிக் குறுகுறுப்பூட்டிய
நினைவென
புதியதாய் அருவிக்குத்
தலை காமித்த சிறுமியின் மனமென
நண்பன் சுபாஸ்உடன்
விலாங்குமீன் பிடித்துப் பொறித்து ருசித்த நள்ளிரவென
இன்னும் இன்னும் சில அந்தரங்கங்களையும்..
இப்படி இப்படி எது ஏதோ ஞாபகத்தில் துள்ளுகிறது
எனக்கு
ஒரு நீண்ட உரையாடலின் முடிவில்
"என்னை இழந்தால் நாடுஇழந்த மகாராணியாம் அவள்"
என்று சன்னமான குரலில் புன்னகைத்துவிட்டு
மார் நிறைய முத்த காய்ச்சலோடு
செல்கிறாள் ஆராதனா
விடிந்துவிட்டது
நீயும் நானும் தற்கொலைக்குத் தயாரான
அதிசாமக் கனவிலிருந்து
சுளீரென அழைத்து வருகிறது
காதினுள் இடறி விழுந்த எறும்பொன்று
நீரூற்றி தலையசைக்கையில் மெதுவாய்
நாவு சுழற்றுகிறது
வளர்ந்து வளரும் இரவு
சிறுநீர் முடித்துத் திரும்பிப் புரள்கையில்
நதி நீந்தும் இலைதனில்
நல்ல விலாசமாக அமர்ந்திருக்கிறது
அவ்எறும்பு
நன்றி உயிரோசை
ஆராதனா எனும் பேய் 36
அப்-பேரழகிய துபாய் யின்
ஒரு வெயிற்கால நள்ளிரவில்
அதன் இயல்பு மாறாது ஓடிக்கொண்டிருந்தது மெட்ரோ ட்ரெயின்..
அதனுள்
நூற்றாண்டுகள் சென்றாகி விட்டது
நாம் பறந்து கொண்டிருக்கிறோம்
சிறகுகள் விரிய விரிய
மேலும்
இறகுகள் படர்த்தும் மொழி சுடர்
அன்பினது யாசிப்பிற்கு
நானும்
நீயாகிய ஆராதனாவும்
இறுதியிலும் இறுதியான
பலி
அல்லது
நேற்றைய குளிர் அந்தி
கர்நாடகா சிமோகாவில் ஆரத்தழுவிய
நமது உதடுகள்
சிரித்த
அத்-துயர இசை!
ஆராதனா எனும் பேய் 34
பிளந்திருக்கும் மார்புகள் அவ்வளவு வெளிச்சத்துடன்
மூர்ச்சையாகித் தொட்டுணரும்
நான்
விண்-பற்றி எரிகிறது முத்தங்கள்
முத்தங்கள்...
எம்பினாலும்;
யோனியும் குறியும்
எத்தனை எத்தனை எம்பினாலும்..
எத்தனை எத்தனை எம்பினாலும்..
சுற்றும்..
சூழும்..
வியாபிக்கும்..
நம் உலகத்தில்
அவர்கள் வியர்க்கும் கெட்டசொப்பனத்தில்
நாம் உரக்க உரக்க காதலையே
ஒலித்து (அ ) ஒளித்து,
விடுகதையென விடாமல் துரத்திக்கொண்டிருக்கிறது
கவிதையைப் போலல்லாததொரு
நாம்..
ஆம்; நாம்.
Sunday, February 3, 2013
ராஜா ராணியால் நிரம்பி வழியும் அரண்மனை
அன்பைக் கொடுத்து
வலியைப் பழக்குகின்றார்களாம்
காலங்காலமாக
அந்த மிகப்புராதனமான அரண்மனையில்
எல்லோரும் தப்பித்தோடிய
ஒரு வரலாற்று நாளில்தான்
அங்கு சென்று சேர்ந்தோம்
அளவில்லாப் பிரயாசத்துடன்
நாம் நமக்கான வாழ்வினை சிருஷ்டிக்க
எல்லாம் அறிந்திருந்தும்
நம் நாட்களில் அன்பு நதியெனப் பாய்கிறது
திகட்டவே திகட்டாதது எனும் கர்வத்துடன்
பருகிக்கொண்டிருக்கிறாய்
ஒற்றை ராணியாகிய நீ
போர்க்களத்தின் செந்நிற நிலமென
வலியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்
உனக்கு ராஜாவாகிய நான்
ஆனந்தம் பேரானந்தம்...
Subscribe to:
Posts (Atom)