Tuesday, April 30, 2013
Monday, April 29, 2013
நல்லது
உச்சபட்ச வன்முறையை
ஆட்கொள்கிறாய்
நல்லது
அத்தனை வெறுமையையும்
என்னிடம் கொட்டிச்செல்கிறாய்
நல்லது
சிறுபிள்ளை என்ன செய்யும்
பாவம்..
நல்லது
(பாவம் நல்லது அல்ல)
அவளுக்கு ஏன் புரியவில்லை?
நல்லது
நமக்கு கிடைத்த
ஆகப்பெரிய பரிசுப்பொருள்
துரோகம்
நல்லது..
ஜீன்ஸை கழற்றி எறிந்துவிட்டு
சாரத்தைக் கட்டிக்கொண்டு உறங்கு
நல்லது
Saturday, April 27, 2013
உனக்கு வேண்டுமா?
வறண்டு
போன என் கண்களைப்
பிடுங்கி எறிந்துவிட்டு
யாருமறியாத மாத்திரத்தில்
செயற்கை கண்களைப் பொருத்தலாமென்றிருக்கிறேன்
மேலும்
அதிலிருந்து சுரக்கும்
ஒரு குவளை வன்மத்தை
முதலில்
அம்மா
உன் மாரில் வீசக்கூடும் நான்.
பிறகு
அதே நாள்
எனது
மரித்தல் செயற்கையாக நிகழும்.
தற்கணம்
இனிப்புக்கூட்டி
ஒரு டம்ளர் தேநீர் பருகப்போகிறேன்.
பிரகாசிக்கும் துயரம்
துள்ளும் டால்பின்களைக் கண்களில் வென்று
புன்னகை ஒன்றைப் பரிசளித்திருந்தாய்
தாயின் முதல் சுகப்பிரசவ வலியென
ரீங்கரிக்கிறது
திறக்கப்பட்ட ஜன்னல்களினூடே
மின்னிச் சிலிர்க்கும்
பனி
பேரலை முழங்கும் நமது இருப்பில்
வெண்சங்கினை ஒத்துப் பிரகாசிக்கும்
இத்துயரத்திற்கு
மரணம் மட்டும் ஒருபோதுமில்லையெனச்
சுற்றிச் சுழல்கிறது
நாளின் கடிகாரம்
நன்றி சொல்வனம்.காம்
ஆராதனா எனும் பேய் 42
இந்த மழையும்
இந்த நாளும்
தொடர்ந்திருத்தல்
நானில்லாதபோதும் சாத்தியப்படத்தான்
இதைச் சொல்லிக்கொண்டிருக்கும் எனக்குத் தெரியவில்லை
குமிழ்கள் காற்றில் அறைபடுவதென
உதிர்ந்துக்கொண்டிருக்கும்
லப்டப் லப்டப் இதயஒலியின் இறுதி
கண்ணில் நீர் வழிந்த
உனது போன நிமிடமே
உடைந்து போய்விட்டது
ஆராதனா
ஒரு வறட்டுப் புன்னகையோடு
எழுந்து போகலாம்
வந்தவர்கள்
தாழக்கிடக்கும் உனது சேலையை
இடுப்பில் தூக்கி
முடிந்துவிட்டு
தண்ணீர் விட்டுக் கழுவு
பூக்கள் சிதறிக் கிடக்கும்
வரவேற்பறையை.
ராணி புத்தி ஸ்வாதீனம் அற்றுப்போனது இப்படித்தான்
குகையினுள் அமர்ந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தாய்
வெளிச்சம் வேண்டி சிறிது தீ பற்றவைத்தாய்
இதமாயிருந்தது கதகதப்பு
இந்நாள்வரை தான்மட்டுமே இவ்வனத்தினுள்
வாழ்ந்துக்கொண்டிருப்பவனென நினைத்திருந்தேன் என்றேன்
கோபத்தின் சாயலுடன்
உனக்குத் தெரியுமா
நீ இங்கு வந்தடைந்தது
ஒருஉக்கிரமான கோடை நாளென்கிறாய்
மேலும்
நீ உள்நுழைய வாசலைத் திறந்தவளே
தான்தானென்கிறாய்
எந்தச் சலனமுமின்றி
எந்தக் கௌரவமும் இன்றி
நெடுநாளாய் இங்கிருக்கும் ராணியாகிய நீ
கதகதப்பும் வெளிச்சமும் புணர்ந்து சுடர்ந்திருந்த தீ
பெரும் பிரகாசத்துடன்
வனம் முழுதும் ததும்பியது
என்னை அது ராஜாவுக்குரிய அலங்காரத்துடன்
கொண்டாட்டத்துடன்
கர்வத்துடன்
நதி குளிக்கக் கரம்பிடித்து அழைத்துச் சென்றது
சுழலில் சிக்கி மரித்த ராஜாவின் சடலம் தேடி
ஏழேழு ஜென்மமாய் அலையும் வனத்தின் மீதுதான்
இப்பொழுது புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்
***
நன்றி கல்கி இதழ் ( 21/ஏப்ரல்/2013 )
சற்று முன் பூத்த ஆயுளுக்குமான நிலம்
விருப்பக் கூட்டிலிருந்து
வேட்கைப் புள்ளிக்குள்
கடற்கரைத் தடங்கள் போலல்லாது
பாதங்கள் நகர்கின்றன,
பெரும் சவாலாகவும்
அதிபயங்கரத் திகிலாகவும்
போதையும் அல்லாத மாம்சமும் அல்லாத
உன்னை எதிர்கொள்வதில் எனக்கிருக்கும்
அதிகச் சிரத்தையோடு கூடிய
மேலதிக கவனப்பிசகுத் துளியும் அற்று
என்னைக் கையாளும் முறையினை
மிக லாவகமாய் அறிந்து வைத்திருக்கிறாய்
இரவும் அல்லாத பகலும் அல்லாததொரு வெளியிலிருந்து
மெள்ள மெள்ள அவிழ்ந்து கொண்டிருக்கிறேன்
நன்றி சொல்வனம்.காம்
Subscribe to:
Posts (Atom)