நிசப்தத்தின் நிசப்தம்..!
அன்று நான் வழியனுப்பப் பட்டேன்.. அதனை, டாட்டா காட்டி அனுப்பினார்கள் என்றுகூட பிள்ளைத் தமிழில் சொல்லலாம்.. உயர உயர பறக்கப் பறக்க.. என்னை, என் இயல்வாழ்வைத் தாழ்த்திக் கொண்டிருந்தது விமானம்.. இதுதான் ஒரு ஆழ்ந்த நம்பும்படியான பொய் என்பேன் பிற்பொழுதில்
அரேபியக்கதை கேட்கும் பாரபட்சமற்ற யாவரிடமும்..
ஆகும் நொடியில், வெயில் அடித்து மழை ஓய்ந்த மனநிலையில், இப்பெரும் அரேபியாவின் கொடுமணல் குன்றின் மீது ஒருநாளைக் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டிருக்கிறேன்..
பணியெடுக்கும் ஒட்டகப் பாலையில், என்றோ அன்று வெறுமையின் அர்த்தம் தாங்காது, கொதி வெயிலில் நனைந்த பைப்பின் மீது வெல்டிங் ராட் உபயோகப்படுத்தி கிறுக்கிய என் பெயருடன் கூடிய நண்பர்கள் இனிசியலை.. கண்டு கொண்டிருக்கும் வானத்தை தீர்க்குமுன், ஒரே ஒருமுறை கண் ஒத்தியெடுக்கவல்லாத ஆசையோடு ஞாபகங்கள் மருகுகிறது கசக்கிப் பிசைந்து இதயக் கூட்டினை..
எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்க்கிறேன்.. உயிர் உருக உருக உருகுவதை..!
யானைப்பாகன் பழக்கி வைத்திருக்கும் ஒரு யானையைப் போன்று சொன்னதைச் செய்யும் மனமாக இருந்த மனசு, சொல்லச் சொல்லக் கேட்காது அடம்பிடிக்கும் மழலைப் பிள்ளையாக.. என் செய்வேன் என்னை ??
மொழிப் பெயர்த்தலும் மௌனச் சொல்லாக உருப்பெயர்வதை, எந்தப் பூட்டுக் கொண்டும் அடைக்க துணிவற்று.. செத்து செத்துப் பயில்கிறது இதுவன்றோ என்னை நான் இருத்திக் கொண்ட இருத்தலென..!
மிகுப் பேரமைதியாக சொல்லப்போனால், தாயை விட்டுப் பிரிந்த வளர்பறவைக்கு உயிர்வாழ எது தேவையென சுலபத்தில் பிரித்தறியாத் தருணம் போல அவிழ்க்கிறேன் என்னை என்னிலிருந்து..!
கடந்துபோன நானூற்று எழுபத்தைந்து நாட்களில் இல்லாத வெறுமை அறையெங்கும்.. இம்மண்ணை விட்டு நகர்ந்தாலும் ஒரு போதும் தீரா வாசமாகத்தான் இருக்கப் போகிறது அரேபிய ஞாபகங்கள் மனசின் அழியாப் பாகங்களில்.. நிஜம் இதுவோ அல்லது வெறும் பிரம்மையோ! என்னை நானே கேட்டுக் கொள்ளத் தவிக்கிறேன்.. பிறகு தவிர்க்கிறேன்.. இந்த
நிசப்தத்தின் நிசப்தம் அலுவலகத்தின் கடைசிக் கணக்கு முடித்தலின் பேரமைதியைக் காட்டிலும் அதிக வலியோடு அமிழ்கிறது..
கொப்பளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கேள்வி உயிர்ப்பெறுகிறது.. நான் மட்டும்தான் பைத்தியக்காரனா இல்லை என்னை மட்டும்தான் இப்பைத்தியம் பிடித்து ஆட்டுகிறதா?? சமயங்களில், சிறு குழந்தைகள் அம்மாவின் தீட்டுப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பப் படுவதைப் போலொரு சூழலோ யென்று.. கேள்விக்கு கேள்வி கொண்டே பதிலும் சொல்லப் பிரியப் படுபவனாகிறேன்..!
ஒரு முழுநாளின் நொடிகள் மிதம் மிஞ்சித் தீரும் பொழுதுதனில் தாள தாளப் பறக்கும் விமானத்தில் நான் உயர உயர பறப்பேனோ..? நம்பிக்கையின் கீற்று நட்சத்திரங்களைவிட பிரகாசமாக.. அது போதும் அது மட்டுமே போதுமெனக்கு.. கூச்சமென்ன வேண்டிக் கிடக்கு கூச்சம்.. எழுது, இன்னும் எழுது எழுதென்று பின்தொடரும் நிழலின் ஒலி சன்னமாகக் கேட்பதை உணர முடிகிறது..
முன்பு இதே மாதிரியான, என்னைப் போன்றே.. விலாசம் இடாது கடிதம் எழுதி, எழுதிக் கிழித்திருக்கிராறாம் அவர்.. அப்படி என்னப் பெரிதாக முடித்திருக்கிறேன் , வெறும்..வெறும்.. நானூற்று எழுபத்தைந்தே நாட்கள் , அதுவும் திருமணம் முடிக்காத இளைஞன்.. எதிர் அறை நண்பருக்கோ என்னைப் போலொரு மகன், என் தங்கையைப் போலொரு மகள்.. என்னைப் போன்றே விலாசம் இடாது கடிதம் எழுதி பல நான்கு முறை எழுதிக் கிழித்தாராம்.. எரிசாராயத்தின் உச்ச போதையிலும் பகிர்ந்து கொண்டே படுக்கப் போனார்..நான் என்ன அப்படிப் பெரிதாக...
உலகம் பெரிது .. காலம் வலியது.. சிறியோன் நான்..இன்னும் எத்தனையோ வாழ வேண்டும்...
கடல் தாண்டி, கடலைக் காட்டிலும் பேரன்பு சூழ்ந்த இருப்பினையே எனக்கு வழித்திருக்கிறீர்கள் உங்களில் யாவரும்.. கடவுள் என்றுமே எனக்காகப் பிரார்த்திப்பார்..!
முழுநாள் நிர்வாணமாய் யொதுங்கிய அறைக் கதவினை டம் டம்மெனத் தட்டுகிறார்கள்.. விமானம் தாள தாளப் பறக்கும்... நான் ஓங்கி ஓங்கி விரிவேன்..
அன்பின் இனியது
அன்பன்றி வேறேதும் உண்டோ.!
ஹாய் அம்மா
ஹாய் அப்பா
ஹாய் தங்கச்சி
ஹாய்டா டேய் உங்க ஆளு சௌக்கியமா ? லெட்டர் கொடுத்துட்டியா.. இல்ல இன்னும் அதே...??
( அவனது 2010 டைரிக் குறிப்பிலிருந்து.. )