Tuesday, January 31, 2012

காலத்தைக் கொன்று வயது வளர்த்தல்..

என்னைச் சிதைத்துப் புதைத்த 
இக்கவிதை உங்களுக்கெதற்கு 

இந்நினைவுகளை தீயிலிட்டுக் கருக்கியப் 
பின்னும் கருமேகமாய்
என்னை ஏன் பின்தொடர்கிறீர்கள்

நானொரு கைவிடப்பட்டவன் 
என்னிடத்தில் நீங்கள் தன்னைக்காண 
ஒரு வாய்ப்பும் இல்லை
விட்டு விடுங்கள் என்னை

நானொரு மனம் பிசகியவன் 
நீங்கள் உங்கள் மனதினை 
வேறு திசையில் செலுத்துங்கள் 

சென்று விடுங்கள் 
இந்நைந்த காகிதம் 
உங்களுக்கானது அல்ல

திரும்புதலின் பாரத்தை சவமாக்க 
ஒரு வைகறையின் மலையுச்சியிடமோ 
ஒரு பின்மதியத்தின் அலையிடமோ 
ஒரு நள்ளிரவின் ஒற்றைக் காற்றாடியிடமோ 
யாசித்துப் பின்-துயிலவென காத்திருக்கிறேன்.   




நன்றி உயிரோசை


Sunday, January 29, 2012

அந்தரத்தில் அசைவுறும் மனப்பிரயாசங்கள்..!



சொற்களின் நதியில் தலை குளிக்கிறாய் நீ
காதலின் கண்ணாடியில் முகம் காண்கிறேன் நான்

வர்ணங்கள் வாய்க்கப்பெற்ற வண்ணத்துப்பூச்சி நீ
பேரலையை உடைக்கும் ஒரு துளி மழை நான் 

நிசியைப் புசிக்கும் ஒற்றை நிலா நீ 
நுரை தின்ற கால்சுவடு நான்

சிறுமி பலூனின் ஆர்ப்பாட்டமென நீ
தட்டாம்பூச்சியின் ரீங்கரிப்பாய் நான் 

பனி குழுமிய இலையென நீ
கிளைமர நிழல் நீந்தும் ஆறென நான் 

இப்பெருங்காட்டின் 
ஆதி துயரென நீ
ஆதி பொய்யென நான் 



Tuesday, January 24, 2012

ஆகையால் காதல் செய்வோம்







காடென வளரும் வாதையினை
பிரசவித்துவிட்டு,
மழலைப்பேச்சு 
மிகப் பிடிக்கும் என்கிறாய்

பெண்மையின் அந்தரங்கம் 
புள்ளியென
கோடென
வட்டமென
விவரித்துக் கொண்டாடி, பின்
ரகசியம் அதிஅற்புதம் என்கிறாய்
பிறழ்வின் முற்றத்தில் நின்று 
உரக்க கத்துகிறேன் 
நீ என் தோழி..
நீ என் தோழி..

ஆகையால்
காதல் செய்வோம் என்கிறாய்

ஓர் அபத்த பகலை
உடைத்துக்கொண்டு நகர்கிறது 
எனது வானம் ! 




வா..

என் சிநேகிதங்களைக் குடித்துவிடும் 
மதுக் குவளைகளுக்கு
எதற்கொண்டும் 
தலை கவிழ்வதாய் இல்லை

வா..
சாகடிப்போம் இறந்த காலத்தை
ஓர் விரல் முத்தம் செய்து
ஓர் புன்னகை எய்து
ஓர் மௌனம் கீறி
ஓர் புணர்தலின் உச்சம் காட்டி
ஓர் அன்பின் மொழி எழுதி

வா.. 
கொண்டாடுவோம்
நிகழ்காலம் தூவும்
பிரியத்தின் நட்சத்திரங்களை
நிலா மழலை கொண்டு.
 
 
 
 

Tuesday, January 10, 2012

உயிரோசை கவிதைகள்..







நிசப்தம்

என் இரவு மிருகத்தின்
பகல் நாவினை
ருசித்து உண்கிறாய் நீ

கூரை வழி சொட்டும் மழையென
வழிந்து கொண்டிருக்கிறது துயரம்

என் ஒரு துண்டு வானத்தின்
முழு கடலையும் கைப்பற்றி விடுகிறாய் நீ

பிரிவின் சாத்தியங்கள்
இனி எந்தவொரு கோடையிலும்
நம்மில் இல்லை.



நானும் அவர்களும்

கடவுள் வருவதாகச் சொன்ன இரவில்
பால்யன் ஒருவன் மூத்திரம் பெய்கிறான்

தான்யாவின் காதுமடல் மச்சம்
எழுதப்பட்டிருந்தது முன்பொரு காலத்தே
கீதாவின் மருதாணிக் கைகளில்

நான் நானாகித் தொலைத்த தருணம்

பெரு மழை தீர்ந்த கனவில்
வயலின் மீட்டிக்கொண்டிருந்தான் கடவுள்.







நன்றி உயிரோசை




Monday, January 2, 2012

உயிரோசை கவிதைகள்..








ஸ்பரிசம்

கோடையின்
செந்நிற கால்கள் அசையும்
நிலத்தில் யாதொரு பிடியுமற்று
நிற்கிறேன்,
உன் பனி கைகளைத் தந்துதவு
இப்-பிள்ளை வாழட்டும்
இன்னும் சிறிது தொலைவு.  


அடையாளம்

துளி,
கடலினும் பெரிதாகையில்
சிறகை விடுத்து பறவையாகிறாய்
பின்தொடரும் அலகு அல்ல
இவ்இறகு,

நினைவின் தடயம் !


நிகழ்ந்த மரணத்தின் காரணங்களாக
1) புறக்கணிப்பின் அழியாத் தடம்
2) அவமானத்தின் அந்திமம்
3) இழப்பின் பெரு ரணம்    

கடவுளெனும் பெயரில் சாத்தான்
சாத்தானெனும்  பெயரில் கடவுள்

எப்படியும் நிகழலாம்
எப்படியும் நிகழ்த்தப்படலாம்
இறப்பு.


நன்றி உயிரோசை..