Monday, October 24, 2011

அவர்கள்







உன் இருள் நிழலில்
மின்னிப் பறக்கிறது
என் தூய ஆவி.

இருப்பது போல்
இல்லாமலிருத்தலில்
இருந்ததை விட
அத்தனை வெளிச்சம்
அத்தனை அடர்த்தி
அத்தனை மென்மை.

கானகம் நுழைந்து
காணாமல் போவதும்
திரும்பி வருதலென்பதும்
ஒரே மாதிரியான நிகழ்வே
அல்லது
"அல்லது" அல்லதாகவே இருக்கட்டும்.

நீ சொல்வது போல்
நான் அந்நதியென
இல்லையெனினும்
நாளைய மழையின்
முதல் துளியாகவே
பிரிகிறேன்.

பச்சைப் புற்களின் நடுவே
நல்ல பாம்பொன்று
சுருண்டு கிடக்கிறது.
நான் அதை நீ என்கிறேன்.
நீ அதை நான் என்கிறாய்.

அது அதுவேயில்லை
வேறொன்றென சொல்லிப் போகிறார்கள்
கடக்கும் இவர்கள்.





நன்றி உயிரோசை..