Thursday, May 23, 2013

நிரூபணங்களின் ஆதி மழை




பெரிதாக ஒன்றும் செய்யவில்லை நான் 
ஆண்டாண்டு காலமாக நீங்கள் 
கவனித்துக்கொண்டிருக்கும் ரோஜா செடியிலிருந்து 
ஒற்றைச் சிகப்பு ரோஜாவைப்பறித்து அவளிடம் நீட்டினேன். 

மௌன மழையை அசரடித்துவிட்டுத் தலையேறிக்கொண்டது
அச்சிகப்பு ரோஜா.

இக்கணம் நாங்கள் இருவரும் உயிரோடில்லை
என்பதை மட்டும்
தம்பி செழியா  
நீ ரகசியமாக வைத்துக்கொள்



ஜென்மம் போதாதல்லவோ




ஒரு குளத்தை அப்படியே எடுத்து 
சிறுகல்லில் எறிவதென்பது
 
உங்களுக்குப் புன்னகையை வரவழைக்கலாம் 
உங்களை வித்தியாசமாக உணரச் செய்யலாம் 
சாத்தியமல்லவென மறுக்கவும் கூடச் செய்வீர்கள் 

ஆனால் 
அதுதான் நிகழ்ந்தது.

இப்பொழுது 
பாவனைச் செய்து கொள்ளுங்கள் 
நீங்கள் விரும்பியபடி 

அதற்குள் 
நாங்கள் இருவரும் கைகளை இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டு 
சுமார் பதினெட்டாயிரத்து மூன்னூற்றி சொச்சம் கிலோமீட்டர் கடந்திருப்போம்



அரவணைப்பின் நிழல்




அவளின் அழுகைக்கு 
என்ன பதில் சொல்லும்
கனவிலிருந்துக் கலைந்த வியர்வை நிஜம்

தற்கொலை செய்திருக்கிறேன் கனவில் 

கண்ணாமூச்சி ஆடும் நம் குழந்தைகளுக்கு 
ஜெயிப்பதில் தான் 
எவ்வளவு சந்தோசம் பாரேன்

அழுத்தம்




அது 
நானல்ல 
ஒரு துர்அதிர்ஷ்டக் கனவு 

என் உருவம் பிரகாசிக்கும் 
கூர்க்கண்ணாடி உன்னிடம்

என்ன வேண்டுமானாலும் செய்யலாம் 
நீ உன் என்னை

கருணை




ATM வாசலில் நின்றபடி 
பிச்சையெடுப்பவர்களின் கனவில் 
வர விருப்பம்.

பஸ்-ஸ்டாப் தோறும் 
ரயிலடி தோறும் 
முதிர்ந்த தாடி அழுக்கு உடையுடன் 
அலையும்
தலைக்கு ஸ்வாதினம் இல்லாதவர்களை
அழைக்கிறேன் எனது கனவில்..

பிறகு 
நான் தொல்லையுறும்
மனது 
சிறிது நம்பிக்கைப் பெறும்

இக்கணம் 
என் கண்முன்னால் 
வண்ணத்துப்பூச்சியொன்று
பறக்கிறது...

வேண்டுமா உனக்கு?

ஆமெனில் 
புன்னகையை என்
தோள்மீது சார்த்திச்
செல்;       

அரேபிய ராசாக்கள் 29




சிறகு முளைக்கும் காற்று கண்டதுண்டோ 
சிறுபிள்ளாய்

நீ எனும் பேருலகில் 
சின்னதாய்த் தவழ்ந்துக் கொண்டிருக்கிறது..  

வேறேதும் அறியாதப் பெரும்புயல் 
அல்லது 
நெடுவறண்ட கானல்

கண்கள் முட்டி அழும் 
உன் வெரித்தப் பார்வையிடம் சொல்

விரும்பி வந்துக் கொண்டிருக்கிறேன்
திரும்பி 

போதுமா அம்மா
கொஞ்சம் சப்தமாகத்தான் சிரியேன்.

Saturday, May 18, 2013

ப்ரதானம்




குறிப்பு உணர்த்துதலென்பது
அந்தரங்கப் பரிசுகள் பற்றி விவாதிக்க அல்ல

அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு

தங்கள் உலகைத் தங்களுக்காக 
வரைகிறது 
கெட்டுப்போனத் தலைகள் இரண்டு எனும்படியான

ஆயிரம் முரண்கள் இருந்துவிட்டுப்போகட்டும்

மழை வேண்டி 
இமைகளைத் துன்புறுத்தி
வருத்துகிறான் 
கண்களைத் திறந்து 
உயிரானவன் 

நிதனாமாக மொழி பெயர்க்கிறாள்
தன் வலிஉடலை
பேரானந்தமாக ஆராதனா...

அவரவர்க்கு அவரவர் வாழ்க்கை 
ப்ரதானம் 

சிவப்பு நிறத்தில் பாயும் நதி



ஆம்புலன்ஸ் அலறுகிறது

பொட்டாட்டம் 
பிஞ்சு வெள்ளரிக்காயினை
ருசி பார்த்துக் கொண்டிருக்கும்
வெயில்

ஓரமாக தானே நின்றுக் கொண்டிருக்கிறான்

காது மடல்கள் இல்லாத கடல் ஒன்றும்
அத்தனை
அபத்தமல்ல

கடவுள் வந்து கொண்டிருக்கிறார்
கடவுள் வந்து கொண்டிருக்கிறார்

நிலவுக்குத் தெரியும் தன் ஓவியம்




சாத்தான்கள் 
பூ பறிக்கும் வனாந்தரத்தில் 
கனி தேடுகிறான் கடவுள் 

அப்பொழுது நுழைகிறது
பாம்பு;
அமைதியாக 
மந்திரங்கள் சொல்லியபடி.

சுண்டில் தீ பரவ முத்தமிடும்
இருவர்
நாங்கள்

சாத்தான்கள் அனைவரும்
ஓங்கி அறைந்த ஒற்றை அடியில்
தத்தம்
கூட்டில்
ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இரவு உறங்கியது
வெள்ளை வெளிச்சத்துடன்

ஆமென்  

ப்ரதானம்





அவளுக்கு நான் பரிசளித்திருந்த 
யெல்லோ கலரில் ஆரஞ்ச்நிற புள்ளிகளிடப்பட்ட
பிராவுக்கும்

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் 
இக்கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 

அது எனது நோக்கமும் அல்ல

அந்தப் பிறந்தநாளன்று
வயிற்றுவலியின் முதல் நாள் 
அவளுக்கு

"இதிலென்ன அதிசயிக்க
பெண்ணானவள் 
எல்லா மாதமும் கடந்து வருவதுதானே 
என்கிறீர்களா?"

வெறித்தனமாக 
அல்லது
பேய்த்தனமாக 
நாங்கள் அன்று 
புணர்ந்தோம் 

ப்ரதானம் 

Thursday, May 16, 2013

டேஸ்டி ஸ்டேட்டஸ்




வழக்கமாகச் செல்லும் பேருந்தில்
அன்று கண்டெக்டர் குடித்திருந்ததால் 
சண்டைஅடித்துவிட்டு 
வழியிலேயே இறங்கிக்கொண்டான் 
கடவுள்

பிறகு ஆவேசமாக 
மொபைல் ஃபோனை எடுத்து 
பொத்தான்களைக் கோபத்தோடு 
தட்டினான்

டூவீலரில் பறந்துகொண்டு வருகிறாள் 
கடவுளின் தோழி

வடபழநி சிக்னல் பிச்சைக்காரனுக்கு 
ஒரு ரூபாய் தரும்படி பணிக்கிறாள் 
ஆம்; அப்பொழுது தோழியும் கடவுள் ஆகிறாள்.

ஆண்கடவுள் கோபத்தில் கத்துகிறான்    

அந்த ஒரு ரூபாய்க்குத்தான் 
பஸ்ஸில் 
"ப்ராப்ளம் மை டியர் லேடி..."

"ஓ..ஓகே ஓகே.. மை மேன்.."

இரண்டு கடவுளர்களும் டூவீலரில்...
(பிச்சைக்காரனாகப்போகும்)
பெரும் பணக்கார ப்ரடீயுஸரோடு
நுங்கம்பாக்கம் 
ரெய்ல்வே ஸ்டேசன் ஒட்டியுள்ள
காரைக்குடி செட்டிநாடு ஹோட்டலில்
கதை சொல்லிக்கொண்டே..

"ஆமா;
வஜ்ரம் மீனில் முள்ளும் எவ்வளவு டேஸ்டி"  

முன் சொன்னப் பிச்சைக்காரர்
அம்மா உணவகத்தில் 
அவ்வளவு வாஞ்சையோடு 
தயிர்சாதத்திற்குத் தட்டிக்கொடுக்கிறார்

ஆமென் 

ஆராதனா எனும் பேய் 48




அரங்கு நிறைந்த கைத்தட்டல்கள்

எனக்கு நானே எழுதிக்கொண்டிருக்கும் 
வாழ்க்கைக்குத் தான் 

அவ்வளவு மென்மையான இசையுடன் 
எவ்வளவு ஆத்மார்த்தமாக நெருங்குகிறாள்
ஆராதனா

இவளை யாருக்குத் தான் 
பிடிக்காது?

முகமூடிக்குள் தேம்பி அழும்
கோமாளி
கழற்றி எறிகிறான் 
தன் நம்பிக்கையற்ற உடலை 

ஆனால்

அவள் என்னை மட்டும் காதலிக்கிறாள். 

நில்



பரிதவிப்பிலிருந்து புத்தம் புதிதாய்
பிறந்திருக்கும் 
அற்ற ஸ்பரிசம் சுடர்தனிமைக்குப் 
பெயர் உன்னையே 
இடுகிறேன் 

நீயோ 
என்னை நீயென்கிறாய்

காற்று வெயில் மழை துயர் இருப்பு நன்மை
நில் 

***




இந்த சிறகு பறக்கிறது
ஆம்
நான் எங்கே

உச்சம்




"ஈ"க்கும் வாழ்வு என்ற உண்டு
அத்தனை வருந்தல்கள்
பின் ஏன்
நண்பா?
நான் வளர்த்தும் பூனை
இன்றைக்கு என்னையொரு சிறு அங்குலமேனும்
பிரியாது
துயர் தளர்த்துகிறது
மழை பெருக்குகிறது

அவள் நா சுழட்டியத்தின்
ஒற்றைத் துளியை
இக்கணம்
உன்னிடம் தருகிறேன்

தூர போ..
தொலைதூரப் போ...

வாழ் உன்னை

நாங்கள்
மழையாகவும்
துயராகவும்
இருக்கிறோம், போக.
 

Wednesday, May 8, 2013

***




என் நதி
இருக்கிறது
அப்படியேத் தான்

இந்த நதியிலிருந்து எந்த நதி பிரிந்தால்
எனக்கென்ன

நான் ஒன்றும் செய்ய முடியாது அதற்கு




அவ்வளவு தான் கவிதை

மழை பலமாகப் பெய்கிறது
என் மனைவி நோய்மையின் கடைசித் தன்மையில்
புலம்புகிறாள்; அழைத்துப் போ...
மிகச்சரியான நொடியில் "நீ"
யென்னை அழைக்கிறாய்

அமைதி

உங்கள் வேலையை நீங்கள் பார்க்கவும்.

ஆராதனா எனும் பேய் 47




இரண்டாயிரம் யுகமாக என்னைக் காக்கவைத்து
"Toooo..busy..gudmng.nice day."
சொல்லிய ஆராதனாவுக்கு
இறந்த பிறகு
நானனுப்பிய
முத்தக்கடல்
இப்பொழுது உங்கள் கைகளில்

ரகசியம்
வேறு யாருக்கும் இதனைப் பகிர வேண்டாம்

என்று சொல்கிறேன்



இரண்டு பைத்தியக்காரர்கள்
உலவிக்கொண்டிருக்கிறார்கள்

ஒன்று
எதிர்காலத்திற்குப் புறந்தள்ளுகிறது
தன்னுடலை

நீங்கள் கேட்பது ஞாயம்தான்

மற்ற ஒன்று
தன்னுயிரை
நிகழ்காலத்தைவிட்டு
அவிழ்க்க மறுதலிக்கிறது

ஆமென்

ஆராதனா எனும் பேய் 46




ஜன்னலுக்கு உள்ளே நீ இருக்கிறாய்
ஜன்னலுக்கு வெளியே என் நீ இருக்கிறாய்
மழை உள்ளேயும் வெளியேயும் ஆடுகிறது
தன் ஆட்டத்தை

திசை தெரியா பறவை
ஈரத்தின் ஓங்கிய வீச்சில்
தன்னைத் தொலைக்கிறது
அல்லது
தன்னை பிறக்கிறது

இங்கு நன் சொல்ல வருவது
பிறத்தல் பற்றி மட்டுமே

ஆமென்