Tuesday, February 14, 2012

அவகாசம்







மகோன்னதத்தின் ஓர் அற்றத்தில்
மரங்கொத்திப் பறவையாக
வியாபித்திருக்கிறாய்
ஞாபகச் செதில்களை கொத்திக்
கொத்திச் சுவைக்க

ஓர் கோடை மரத்தின்
உதிர்ந்த இலையாய்,
தப்பிச் செல்லும் சூட்சமத்தை
துளாவிக் கொண்டிருக்கிறேன்

சிறிது அவகாசம் கொடு. 



நிற்க





கனவின் மீள்வருகையென
உன்னை சித்தரிப்பதென்பது
அதனை எளிதொன்றும் அல்ல.

நினைவின் பழுப்பேறிய மரத்தில் அடைபடாது
இலவம் பஞ்சென பிரிந்து செல்வதிலொன்றும்
அதனை துயர் உயிர்ப்பதில்லை.

காத்திருத்தல்
பிழைத்திருத்தமென!

நெருடல்







ஆதி துயரென வழியும்
உனது சொற்களிடமிருந்து
இடறி விழுகிறேன்

பற்றி விழுங்குகிறது
ஆதி பொய்!

வயதேறியவர்கள் தவிர்த்தல் நலம்







பதின் வயதின் தனித்தீவில்
பறந்து வருகிறேன்
ஒரு வௌவாலைப் போல.

எனது நட்சத்திரங்கள் மட்டுமே
உலர விடப்பட்டிருக்கும்
அப்பெருவெளியில்
யாரையும் எதற்கெனினும் பரிச்சயமற்றதாய்
பாவித்து நெளிகிறேன்
நதியில் எதற்காகவோ தனித்தலையும்
ஒரு சிறு மீன்குஞ்சினைப் போல.

புதிர் காட்டில்
கொடுமழையும்
அடர் தீயும்
சர்ப்ப வாயும்
எழும்பித் தொலைக்காத வரை. 



அடையாளம் தொலைத்தல்








தற்கொலை நிகழ்ந்த அறையைக்காட்டிலும்
தற்கொலை நிகழ்ந்த தெரு
பேரமைதியாகப் பருகுகிறது
இரவின் வெய்யிலை.

Sunday, February 5, 2012

அரேபிய ராசாக்கள் 17




மனவெளியெங்கும் 
வெயில் பிசுபிசுக்கிறது
இப்பனிக்காலத்திலும்.

காற்றின் தடமெங்கிலும் 
பாலையின் நிறம்
நிறைந்து வழிகிறது.

இருப்பின் வழியெங்கிலும் 
இல்லாமையின் ஸ்பரிசம் 
கண்ணீர் பருகுகிறது.  

நாளை
மற்றுமொரு நாளே 
என்பதில் தர்க்கப்பட்டு உதறுகிறேன்
கனவின் வெள்ளை விரல்களை. 


நன்றி உயிரோசை


Tuesday, January 31, 2012

காலத்தைக் கொன்று வயது வளர்த்தல்..

என்னைச் சிதைத்துப் புதைத்த 
இக்கவிதை உங்களுக்கெதற்கு 

இந்நினைவுகளை தீயிலிட்டுக் கருக்கியப் 
பின்னும் கருமேகமாய்
என்னை ஏன் பின்தொடர்கிறீர்கள்

நானொரு கைவிடப்பட்டவன் 
என்னிடத்தில் நீங்கள் தன்னைக்காண 
ஒரு வாய்ப்பும் இல்லை
விட்டு விடுங்கள் என்னை

நானொரு மனம் பிசகியவன் 
நீங்கள் உங்கள் மனதினை 
வேறு திசையில் செலுத்துங்கள் 

சென்று விடுங்கள் 
இந்நைந்த காகிதம் 
உங்களுக்கானது அல்ல

திரும்புதலின் பாரத்தை சவமாக்க 
ஒரு வைகறையின் மலையுச்சியிடமோ 
ஒரு பின்மதியத்தின் அலையிடமோ 
ஒரு நள்ளிரவின் ஒற்றைக் காற்றாடியிடமோ 
யாசித்துப் பின்-துயிலவென காத்திருக்கிறேன்.   




நன்றி உயிரோசை


Sunday, January 29, 2012

அந்தரத்தில் அசைவுறும் மனப்பிரயாசங்கள்..!



சொற்களின் நதியில் தலை குளிக்கிறாய் நீ
காதலின் கண்ணாடியில் முகம் காண்கிறேன் நான்

வர்ணங்கள் வாய்க்கப்பெற்ற வண்ணத்துப்பூச்சி நீ
பேரலையை உடைக்கும் ஒரு துளி மழை நான் 

நிசியைப் புசிக்கும் ஒற்றை நிலா நீ 
நுரை தின்ற கால்சுவடு நான்

சிறுமி பலூனின் ஆர்ப்பாட்டமென நீ
தட்டாம்பூச்சியின் ரீங்கரிப்பாய் நான் 

பனி குழுமிய இலையென நீ
கிளைமர நிழல் நீந்தும் ஆறென நான் 

இப்பெருங்காட்டின் 
ஆதி துயரென நீ
ஆதி பொய்யென நான் 



Tuesday, January 24, 2012

ஆகையால் காதல் செய்வோம்







காடென வளரும் வாதையினை
பிரசவித்துவிட்டு,
மழலைப்பேச்சு 
மிகப் பிடிக்கும் என்கிறாய்

பெண்மையின் அந்தரங்கம் 
புள்ளியென
கோடென
வட்டமென
விவரித்துக் கொண்டாடி, பின்
ரகசியம் அதிஅற்புதம் என்கிறாய்
பிறழ்வின் முற்றத்தில் நின்று 
உரக்க கத்துகிறேன் 
நீ என் தோழி..
நீ என் தோழி..

ஆகையால்
காதல் செய்வோம் என்கிறாய்

ஓர் அபத்த பகலை
உடைத்துக்கொண்டு நகர்கிறது 
எனது வானம் ! 




வா..

என் சிநேகிதங்களைக் குடித்துவிடும் 
மதுக் குவளைகளுக்கு
எதற்கொண்டும் 
தலை கவிழ்வதாய் இல்லை

வா..
சாகடிப்போம் இறந்த காலத்தை
ஓர் விரல் முத்தம் செய்து
ஓர் புன்னகை எய்து
ஓர் மௌனம் கீறி
ஓர் புணர்தலின் உச்சம் காட்டி
ஓர் அன்பின் மொழி எழுதி

வா.. 
கொண்டாடுவோம்
நிகழ்காலம் தூவும்
பிரியத்தின் நட்சத்திரங்களை
நிலா மழலை கொண்டு.