Saturday, April 27, 2013

ராணி புத்தி ஸ்வாதீனம் அற்றுப்போனது இப்படித்தான்




குகையினுள் அமர்ந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தாய்
வெளிச்சம் வேண்டி சிறிது தீ பற்றவைத்தாய்
இதமாயிருந்தது கதகதப்பு
இந்நாள்வரை தான்மட்டுமே இவ்வனத்தினுள்
வாழ்ந்துக்கொண்டிருப்பவனென நினைத்திருந்தேன் என்றேன்
கோபத்தின் சாயலுடன்

உனக்குத் தெரியுமா
நீ இங்கு வந்தடைந்தது
ஒருஉக்கிரமான கோடை நாளென்கிறாய்
மேலும்
நீ உள்நுழைய வாசலைத் திறந்தவளே
தான்தானென்கிறாய்
எந்தச் சலனமுமின்றி
எந்தக் கௌரவமும் இன்றி
நெடுநாளாய் இங்கிருக்கும் ராணியாகிய நீ

கதகதப்பும் வெளிச்சமும் புணர்ந்து சுடர்ந்திருந்த தீ
பெரும் பிரகாசத்துடன்
வனம் முழுதும் ததும்பியது

என்னை அது ராஜாவுக்குரிய அலங்காரத்துடன்
கொண்டாட்டத்துடன்
கர்வத்துடன்
நதி குளிக்கக் கரம்பிடித்து அழைத்துச் சென்றது
சுழலில் சிக்கி மரித்த ராஜாவின் சடலம் தேடி
ஏழேழு ஜென்மமாய் அலையும் வனத்தின் மீதுதான்
இப்பொழுது புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்
நீங்கள்

***

நன்றி கல்கி இதழ் ( 21/ஏப்ரல்/2013 )



No comments: