Sunday, June 16, 2013

விசுவாசம் எனும் மையச் சரடு




தற்கொலைக்குத் துணிபவர்களைக் கடக்க நேரிட்டால்
முதலில் சில அபத்த வசனங்களைப் பகிரவும்
பார்த்துக் கொண்டே இருங்கள்
சற்று நேரத்தில்
துணிபவர்களது மனம் குலையும்

பிறகு
இன்னும் கூடக்கொஞ்சம் நெருங்கலாம்
எப்படியெனில்
ஒன்றுக்கும் உதவாத அன்பின் நெடியினை வீசி.. 
சுயம் ஆசுவாசத்திற்கு வருவார்கள்
பேடி கலைந்து அப்பொழுது அவர்கள்

பிறகு
கரங்களை இறுகப்பற்றி
அழைத்துச் செல்லலாம் சிறுதொலைவு
முக்கியமாக அந்நேரம்
பேச சந்தர்ப்பம் அவர்களுக்குத் துளியும் தரக்கூடாது
வலுவாக

காரணங்களை மறந்தும் கேட்டுவிடவேக் கூடாது
பிறகு
தற்கொலையைவிடக் கொடிய அழுகையை நாம் கேட்க நேரிடும்
ஆகையால்
மறந்தும் கேட்கவேக் கூடாது காரணங்களை

முக்கியமாக மிகுந்தப் பசியுடன் அலைபவர்கள்
தற்கொலைக்குத் தயாராகுபவர்கள்

எவ்வளவு முடியுமோ
அவ்வளவு வாஞ்சையோடு அவர்களுக்குப் பசியாற்றுங்கள்

மறந்துவிடவேண்டாம்
முக்கியமாக
நீங்கள் தரும் உணவில்
விஷம் கலப்பதை

ஆமென் 

No comments: