Monday, October 25, 2010

வெற்றுடல் தேவதைகள்..






முகங்களற்ற
நிழல்களற்ற
மழை பூத்த சாலையில்
இன்னல் தனிமையைத் தூவிச் செல்வதற்கென
அமையப்பெறுகிறது அவனுக்கு
அம்மதியப்பயணம்..

தலை நொடித்து கற்கள் கொஞ்சத்தை 
உள்ளங்கை தனில் அடுக்கிக்கொண்டு
சாலையின் கடைசி வளைவில்
கால் மடித்துக் கொள்கிறான்.

கற்கள் ஒவ்வொன்றாகத் தொலைபடுகிறது..

தனித்த கைகளாகிய நிலையினில்
ஒரு அமைதியை அடையாளப் படுத்துகிறான்,
அமைதி அதன்பொருட்டு
அமைதியைத் தருவிக்கிறது..!

கன்னம்வழி வளர்ந்த நீரில்
கடுமையாக உப்பின் வாசம்..

காற்று கொணர்ந்த இசையில்
உப்பின் அடர்த்தி குறையக் குறைய..

பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது.


நன்றி உயிரோசை..

Monday, October 18, 2010

சுயம் தொலைதல் அல்லது தொலைத்தல்..







முழு நீலக்கடலில் கோடிநட்சத்திரங்கள்
அம்மணமாய் ஆடித்திரிவதை
நாய்கள் குரைக்கும் நடுநிசியில்
வோட்கா பாட்டிலிலும்
ஆறாம் விரலிலும்
ரகசியமாய் வழித்துக்கொண்டிருந்தேன்..!

முடியாது நீண்டிருந்த அவ்விரவின்
மற்றொரு கனவில்
தடித்த ஸ்தனக்காரி வற்புறித்திய வண்ணம்  
வருத்தி பின்தொடர்ந்திருந்தாள்..

பின்னொரு கறுத்த ஆடு
தலையற்று முண்டமாகி
தடாகத்தில் சிவத்த இரத்தத்தை
வழியவிட்டபடி செத்துக் கொண்டிருந்தது..

கனவுகள் நிறைய நிறைய பேசியதோடே..

ஆழ்வானத்தின் சிறுதுளையில்
மழிந்து மாய்ந்துகொண்டன.

அந்த ஒரு இரவு
விடிந்தபாடில்லை
இன்னும்...!!      



நன்றி உயிரோசை..  

Wednesday, September 22, 2010

நிழலென வளரும் மரம்..!


சக்கரங்கள் சுழலும் தண்டவாளங்களில்
உருளும் இசையென
மனம் பிரள்கிறது,
நிரம்பிய குடம் உடைந்து
பூ உதிர்ந்த தருணம்..!

குளுக்கோஸ் குழல் வழி
தெம்பூட்டப்படுபவளின்
ஆழக்கண்கள் பூவை நனைக்க,
அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!

புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் !

அழுது அழும் பூவுக்குத்
தேவதைகள் கதைசொல்லத்
தழும்பும் சமயம்,

நான் கொண்டுசென்ற பழக்கூடை
சிறு சிறு வர்ண நட்சத்திரங்களை
சிறகசைத்து தருவதாகவும்
அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும்
அக்குழந்தைப்பூவே சைகை செய்கிறது
பிரசவஅறை ததும்ப..!


நன்றி உயிரோசை..

Tuesday, September 14, 2010

மிகநெருங்கிய மரணத்தின் கசடு..



யாருமற்ற குழந்தைக்கு ஒத்தடமாய்
இந்த நகரம்
என்னைத் தெருக்களில் நடத்திக் கொண்டிருக்கிறது..

இந்தப் போதைக்கு
எனக்கே என்னைப் பிடிக்காதிருக்கையில்
யாருக்கு என்னைப் பிடித்துவிடப் போகிறதென
வினவுவதாகவுமில்லை.

தொலைபேசியில் வந்த செய்தியை
நெடுநேரமாய் உமிழ்ந்தவாறே.. 
அது மட்டும் உறுதி, 
பதில் அனுப்பப் போவதில்லை
இம்முறை என்னை நான்
தோற்றுவிடப் போகிறேன்.

இருப்பதைவிட
இல்லாது இருப்பது
என்னை மிகசௌகர்யமாக இருப்பதாக
உணரும் தருணம் இது.

இப்பொழுதெல்லாம்,
கண்கூசும் பகலில்
பத்துக்குப் பத்து அறையைவிட்டு
வெளியெங்கும் நான் நடமாடுவதில்லை..

இரவுமட்டுமே பிடித்துப் போய்விட்டதோ யென்னவோ,
நெடுநாட்களாய் வானம்
பசியூட்டியவாறே குழந்தையைத்
தொடர்கிறது.!

எனது தொலைபேசியில்
நான் வாசிக்காத செய்திகள்
குவிந்து கிடக்கிறது. 


நன்றி உயிரோசை..

Thursday, September 2, 2010

எரியும் மெழுகில் நனையும் இரவு..





சிற்சில ஞாபகங்கள்
என்றுமே அழியாதிருப்பின் அடையாளமாய்
பழையதை யொத்த கடிதங்கள்
இன்னும் சிற்சில..
 
இன்றும்..! 

ஒரு மழைநாளில் தான் 
உருகி வழிந்தது இரவு
நமக்கான மெழுகில்..!

அம்மெழுகின் கதகதப்பு,

என் வாழ்வின் கதவடைபட்ட பின்பும்.. 
தீராக் காற்றின்
எல்லாச் சுவர்களிலும்
மோதிக்கொண்டுதான் வாழ்கிறது..

ஒரு முடிந்த உரையாடலின் 
எல்லாச் சொற்களிலும்
நீயே காதலி..

முடிவில்லா எழுத்துக்களின்
எல்லாக் கடிதங்களிலும்
நானே காதலன்..

மெழுகு உருகட்டும்..
இரவு நனையட்டும்..! 





நன்றி உயிரோசை..    

Friday, August 20, 2010

நேசப்பரிபாஷை..!


கடல்மேல் பறவையாகும் வானம்!

போன்றதொரு நேசப்பரிபாஷையினை
விழிகளிரண்டிலும் அழுந்தப் பிடித்தவளாய்..

என்னை மிக நெருக்கத்தில்
பருகச் சொல்லிக் கெஞ்சுகிறாள் !

அப்பொழுதும் என்னை நான்
மிகப்பத்திரமாக மௌனமாகவே
தொலைத்துக் கொண்டிருந்தேன்..!

காய்ந்த அந்த ஒற்றைரோஜா இதழ்கள்
மழையின் ஈசல் போல் 
அவளது மென்விரல்களில்
தன்னைச் செத்துக்கொண்டிருந்தது..

அப்பொழுதும் மௌனமாகவே வைத்திருந்தேன்
என்னை நான்..!

பிரிவின்..
கையடங்காக் குருதியினை... 

ஒரு முத்தத்தில்..

எரித்துவிடத் தயாரானவாளாகி,  
எனது வன்விரல்களை
மெல்லப் பற்றிக் கொண்டு
அழ.. அழ.. அழுதேவிடுகிறாள்...

நான் பெருமழையாகி
அவளை இறுகக் கட்டிக்கொள்கிறேன்..

பின் ஒருவானவில்லின் மேல்
இருவரும் கைகோர்த்து நடக்கின்றோம் !!

வண்ணத்துப்பூச்சிகளும்..
காதலும் ( "காதலென்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடுவதல்ல அது!" )
எங்களுக்கானது.. எங்களுக்கானதே..!   


நன்றி உயிரோசை..   

Tuesday, August 10, 2010

நிலாவிளக்கும் மௌனஇரவும்..!



மழைநேரத்துக் குடைக்கும்
வெயில்மதிய நேரத்துக் குடைக்கும்

இடையானதொரு மெல்லிய ஊடலாய், 

தயங்கித் தயங்கி.. 

செதிலுரிகிறது வார்த்தைகள்,
பரிசுத்தமான கூடலுக்கு ! 

பிறிதொரு பரிச்சயப் பொழுதில்..
 
நிர்வாணம்
உச்சிமுகர் சொல்லாடலில் தழைக்கும்,
 
இந்நொடிவரை யாதொரு பிசிபிசுப்புமின்றி
மருகி அசைகிறதொரு நிலாவிளக்கு !

தயங்கித் தீர்ந்த கற்பனைக்கடலில்

தங்கமீன்நிற இரு பறவைகளின்
வெட்க மௌனங்களும்
முழுமையாய் இசைக்கத் துவங்க, 

அப்பேரலையின் வெளியெங்கும்
இயல்பானதொரு படுக்கையறைக் காட்சி ! 

எங்கோ ஒரு படுக்கை புணர்ச்சி கழிந்து
புன்னைகையோடு விடுபடலாம். 


நன்றி உயிரோசை..    

Monday, August 2, 2010

அரேபிய ராசாக்கள் 13..


மழைபோல் பெய்யும் வெயில்,
எழுத எழுத எழுதிவிடு
வரியைப் போலல்ல வாழ்வு.

மலரென விரியும் இருள்,
பிழையாயினும்
வக்கற்று எரிகிறது
இளம் மூங்கில்..

மெல்லப் பரவும் காற்றின் திசையில்

ஒற்றைச் சிறகின் நிழல்,
புனைவிரவின் ஈர நெடி.

ஒரு அரேபியா
ஒரு பாலை
ஒரு கானல்
ஒரு நிஜம்.

யாசிப்பு யோசனைக்கு மறுதலித்தும்,
ஒலி என்பதைக் காட்டிலும்
இசையெனச் சொல்லிவிடுவது
ஆகச்சிறந்தது.


நன்றி உயிரோசை..

Friday, July 30, 2010

அரேபிய ராசாக்கள் - பிரிவு அறிவித்தல்..




நிசப்தத்தின் நிசப்தம்..!

அன்று நான் வழியனுப்பப் பட்டேன்.. அதனை, டாட்டா காட்டி அனுப்பினார்கள் என்றுகூட பிள்ளைத் தமிழில் சொல்லலாம்.. உயர உயர பறக்கப் பறக்க.. என்னை, என் இயல்வாழ்வைத் தாழ்த்திக் கொண்டிருந்தது விமானம்.. இதுதான் ஒரு ஆழ்ந்த நம்பும்படியான பொய் என்பேன் பிற்பொழுதில் அரேபியக்கதை கேட்கும் பாரபட்சமற்ற யாவரிடமும்..


ஆகும் நொடியில், வெயில் அடித்து மழை ஓய்ந்த மனநிலையில், இப்பெரும் அரேபியாவின் கொடுமணல் குன்றின் மீது ஒருநாளைக் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டிருக்கிறேன்..


பணியெடுக்கும் ஒட்டகப் பாலையில், என்றோ அன்று வெறுமையின் அர்த்தம் தாங்காது, கொதி வெயிலில் நனைந்த பைப்பின் மீது வெல்டிங் ராட் உபயோகப்படுத்தி கிறுக்கிய என் பெயருடன் கூடிய நண்பர்கள் இனிசியலை.. கண்டு கொண்டிருக்கும் வானத்தை தீர்க்குமுன், ஒரே ஒருமுறை கண் ஒத்தியெடுக்கவல்லாத ஆசையோடு ஞாபகங்கள் மருகுகிறது கசக்கிப் பிசைந்து இதயக் கூட்டினை..


எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்க்கிறேன்.. உயிர் உருக உருக உருகுவதை..!


யானைப்பாகன் பழக்கி வைத்திருக்கும் ஒரு யானையைப் போன்று சொன்னதைச் செய்யும் மனமாக இருந்த மனசு, சொல்லச் சொல்லக் கேட்காது அடம்பிடிக்கும் மழலைப் பிள்ளையாக.. என் செய்வேன் என்னை ??


மொழிப் பெயர்த்தலும் மௌனச் சொல்லாக உருப்பெயர்வதை, எந்தப் பூட்டுக் கொண்டும் அடைக்க துணிவற்று.. செத்து செத்துப் பயில்கிறது இதுவன்றோ என்னை நான் இருத்திக் கொண்ட இருத்தலென..!


மிகுப் பேரமைதியாக சொல்லப்போனால், தாயை விட்டுப் பிரிந்த வளர்பறவைக்கு உயிர்வாழ எது தேவையென சுலபத்தில் பிரித்தறியாத் தருணம் போல அவிழ்க்கிறேன் என்னை என்னிலிருந்து..!


கடந்துபோன நானூற்று எழுபத்தைந்து நாட்களில் இல்லாத வெறுமை அறையெங்கும்.. இம்மண்ணை விட்டு நகர்ந்தாலும் ஒரு போதும் தீரா வாசமாகத்தான் இருக்கப் போகிறது அரேபிய ஞாபகங்கள் மனசின் அழியாப் பாகங்களில்.. நிஜம் இதுவோ அல்லது வெறும் பிரம்மையோ! என்னை நானே கேட்டுக் கொள்ளத் தவிக்கிறேன்.. பிறகு தவிர்க்கிறேன்.. இந்த நிசப்தத்தின் நிசப்தம் அலுவலகத்தின் கடைசிக் கணக்கு முடித்தலின் பேரமைதியைக் காட்டிலும் அதிக வலியோடு அமிழ்கிறது..

கொப்பளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கேள்வி உயிர்ப்பெறுகிறது.. நான் மட்டும்தான் பைத்தியக்காரனா இல்லை என்னை மட்டும்தான் இப்பைத்தியம் பிடித்து ஆட்டுகிறதா?? சமயங்களில், சிறு குழந்தைகள் அம்மாவின் தீட்டுப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பப் படுவதைப் போலொரு சூழலோ யென்று.. கேள்விக்கு கேள்வி கொண்டே பதிலும் சொல்லப் பிரியப் படுபவனாகிறேன்..!


ஒரு முழுநாளின் நொடிகள் மிதம் மிஞ்சித் தீரும் பொழுதுதனில் தாள தாளப் பறக்கும் விமானத்தில் நான் உயர உயர பறப்பேனோ..? நம்பிக்கையின் கீற்று நட்சத்திரங்களைவிட பிரகாசமாக.. அது போதும் அது மட்டுமே போதுமெனக்கு.. கூச்சமென்ன வேண்டிக் கிடக்கு கூச்சம்.. எழுது, இன்னும் எழுது எழுதென்று பின்தொடரும் நிழலின் ஒலி சன்னமாகக் கேட்பதை உணர முடிகிறது..


முன்பு இதே மாதிரியான, என்னைப் போன்றே.. விலாசம் இடாது கடிதம் எழுதி, எழுதிக் கிழித்திருக்கிராறாம் அவர்.. அப்படி என்னப் பெரிதாக முடித்திருக்கிறேன் , வெறும்..வெறும்.. நானூற்று எழுபத்தைந்தே நாட்கள் , அதுவும் திருமணம் முடிக்காத இளைஞன்.. எதிர் அறை நண்பருக்கோ என்னைப் போலொரு மகன், என் தங்கையைப் போலொரு மகள்.. என்னைப் போன்றே விலாசம் இடாது கடிதம் எழுதி பல நான்கு முறை எழுதிக் கிழித்தாராம்.. எரிசாராயத்தின் உச்ச போதையிலும் பகிர்ந்து கொண்டே படுக்கப் போனார்..நான் என்ன அப்படிப் பெரிதாக...


உலகம் பெரிது .. காலம் வலியது.. சிறியோன் நான்..இன்னும் எத்தனையோ வாழ வேண்டும்...
கடல் தாண்டி, கடலைக் காட்டிலும் பேரன்பு சூழ்ந்த இருப்பினையே எனக்கு வழித்திருக்கிறீர்கள் உங்களில் யாவரும்.. கடவுள் என்றுமே எனக்காகப் பிரார்த்திப்பார்..!


முழுநாள் நிர்வாணமாய் யொதுங்கிய அறைக் கதவினை டம் டம்மெனத் தட்டுகிறார்கள்.. விமானம் தாள தாளப் பறக்கும்... நான் ஓங்கி ஓங்கி விரிவேன்..


அன்பின் இனியது
அன்பன்றி வேறேதும் உண்டோ.!


ஹாய் அம்மா
ஹாய் அப்பா
ஹாய் தங்கச்சி
ஹாய்டா டேய் உங்க ஆளு சௌக்கியமா ? லெட்டர் கொடுத்துட்டியா.. இல்ல இன்னும் அதே...??


( அவனது 2010 டைரிக் குறிப்பிலிருந்து.. )



Monday, July 26, 2010

வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..

ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்..  நூறாவது இதழாக இவ்வார உயிரோசை..!





ஆயாசமாய் பகலை அள்ளிவிழுங்குமாறுயிருந்த சூரியன்

குறிப்பிட்டதொரு குறிப்புணர்த்துவதாக சிலாகித்து, 

பின்அதில் தொடர.. எதன்பொருட்டோ லயிப்பற்று, 

காற்றசைக்கும் மரஇலையின் திசையில்
வெகுதொலை பறப்பதாயொரு முடிவுக்குவந்து..

பின்தொடர் பறவையொன்றின் இறகில்

இரவைக் கொண்டுவரும் நிலவின் நுனிமூக்கில்
கிட்டாதிருந்த கவிதைக்கான
வார்த்தைகளேதும் சொட்டிவிடாதா..

யென்றவொரு கொதியோடு

மனம்புரளும் கொள்ளாத இருப்பில்,

மனங்கொத்திமீனாக வந்துவிடுகிறது
புட்டிவரை கூந்தலுடைய அப்பிசாசின்

உயிர் உறிஞ்சும் கண்கள் !!


நன்றி உயிரோசை..