Friday, March 26, 2010

மரணத்தின் வெக்கையிலிருவர் !

குறிப்பு,
நிகழ்வென்றால் நிகழ்வு,
கவிதையென்றால் கவிதை .

இருவர் பேசுகிறார்கள்,
நினைவுகள் பூத்திருக்கும்
பூந்தோட்டங்களை நாடிச்செல்வதில்லை
மாலைவேளைகளும் கொடுமனமும்.
வரிகளெதுவும் இருந்துவிடாத
மொழியில்லா இசையையே
பற்றிப்பிடித்திருக்கிறது இரவுகள்.
மழலைகளை கடக்கநேரும் பொழுதுகள் மட்டும்
எத்தனை தடுத்தும்
நம்மையும் கடந்துவிட நேர்கிறது.

காதல்வலியில் யாரோ அவர்கள்
எழுத மறந்ததெல்லாம்
யாருக்காகவோ ஞாபகப்படுத்தப்படுகிறது!

Wednesday, March 24, 2010

அலைப்பேசி..

வெட்கம் கசங்கிய
பின்மாலையில் பத்திரப்படுத்திவைக்கலாம்
விடுபட்ட வெட்கங்களை..

அல்லது..

வெட்கம் கசிய
முன்னிரவில் முத்தங்கள்
கோர்த்திசையலாம்..

இரண்டுமே ஒன்றாயின்..
அறிந்தவர்கள் அறிந்திருக்கலாம் ,
நீரை யாமாற்றும் தக்கைபோல்
காதலை யாமாற்றும் கருவியுமென!
பின் நவீன யுகத்தில்
இவ்வியாபார அலைப்பேசியினை..

 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5025:2010-03-30-04-41-47&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று..

Tuesday, March 23, 2010

ஆகாயத்தில் பொம்மைகள் !!


விளக்கணைக்காமல் உறங்கும் வானம் !
நட்சத்திரங்கள்னாலே ரசனைக்கும் ரசிக்கவும் தானே ?
இப்போ என்ன ஸ்பெஷல்..??
இது "ஆகாயத்தில் பொம்மைகள்" யென்பதற்கான நட்சத்திரங்கள்!!
சரி, அழைத்து வரப்போவது யார் ?
ஆணா - பெண்ணா ?
ஷ்ஷ்.. அவள் கனவிலிருப்பாள்
நானே நகர்கிறேன்..

ஆமா, அவள் எத்தனை முறை கெஞ்சியிருப்பாள் ?
எத்தனைமுறை ??
ப்ச்.. துல்லியமாக ஞாபகமில்லை,
பட்.. எழுதவும் எதுவும் தனித்து தேர்ந்தெடுப்பதில்லை அவளை,
அதனாலோ என்னவோ எழுதவுமில்லை !!

வானத்தில் பத்திரப்படுத்திய
கை நிறைய விளக்குகளோடு
வீடு சென்றுகொண்டிருக்கிறேன் இப்போ..

என்ன ஆச்சர்யம்!!
பயத்திற்கு மாறாக, இம்முறை அவளும்
விழி நிறைய வின்மீன்களை பெற்று வைத்திருக்கிறாள்!
ஆமாங்க, புது கல்யாணம்,
அதுவும் காதல் கல்யாணம்..
முன்னெப்பொழுதும் அவளிடம்
பட்டாம்பூச்சிகளையோ..
ஹைகூ ஜன்னல் மழையையோ தான்
பரிசாக தந்திருக்கிறேன்.
இம்முறை, பொம்மை தரலாமென நெளிகிறேன்.......
அவளும் இறுக்கமாக கட்டிக்கொள்கிறாள்!

Thursday, March 18, 2010

பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தோல்வி !



மற்றவைகளிலடங்கும் போதையெனில்,
காகிதப்பூவையோ
கழிவறையையோ
அண்டியிருக்கலாம்..

வெங்காயக்காதல்,
கண்ணீரிடம்தான் மடலாடல்,
மீதிவரிகளுக்கு..
அவளிடம் விருப்பமேதும்
அறிகுறியில்லாபட்சத்தில்
முடித்து வைக்கிறேன்
தோல்வியின் புள்ளியை.!

http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003194&format=html

நன்றி திண்ணை..

Monday, March 15, 2010

முழு நீண்ட காத்திருப்பு


இசைக்கும்
இரைச்சலுக்குமான
மிகமெல்லிய வெளியில்,
விட்டுக்கொடுத்தலுக்கும்
விட்டு விலகுவதற்குமான
உடன்படிக்கைகள் கையெழுத்தாகின்றன

நேசங்களின்
பொன்முட்டைகள் அறுபட்டு,
இறைந்து ஊர்கிறது
காற்றெங்கும் புரிதலின் தோல்வி

இயலாமையில் இலைகள்,
காய்ந்து சருகாகி
தெருவெங்கும் சுற்றி நடப்பதுபோல்
உபயோகமில்லாத நினைவுகளோடு
வெறுமனே நகர்கிறேன்

வினவுதலில்லாத பதில்களிடம்
தோற்றுப்போகும் வினாக்களிடமிருந்து
புரிதலை எப்பொழுதுமே
ஒற்றைப்படுத்த,
காலம் தயாராகவே!!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4801:2010-03-15-10-02-54&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று.. 

Saturday, March 13, 2010

அவர்கள் காதலிக்கட்டும்..!



தேவதைகள் காதலிப்பதில்லை..
நீ தேவதை அல்ல..
கழுத்தோரம் முத்தப்பந்தலிடுகிறாள்
காது திருகி ,
செல்லம் கொஞ்சுபவன்
சிணுங்கி மீள்கிறான்..!

வெட்கங்கள்..
இசை மீட்டும் ,
அவ் - அந்தி மைதானம்
மழையின் ஆசிர்வாதம்..!

காதல் பரிசுத்தம்..
காமம் குடைவானம்..
மெல்ல படையெடுக்கும்
மின்மினி விண்மீன்கள்..!

அம்மா பின்தொடரும்
தவழும் பிள்ளைக்கு..
சோறூட்டும் வட்டநிலா ,
மொட்டைமாடிக்கு வெளிச்சமூட்டும்
காதல் சில்மிஷங்கள்..!

அதோ அந்நீண்டதெருவின்
பச்சைநிற கதவு வீட்டிற்கும்
பழுப்படைந்த ஜன்னல் குடிசைக்கும்
இக்கடிதம் செல்வதெப்படி.?
அவர்கள் காதலிக்கட்டும்..!

 http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003122&format=html

நன்றி  திண்ணை..

Monday, March 8, 2010

மாலுமி என் அண்ணன் மட்டுமல்ல..!


கொடூரமாய் தீர்ந்த
கொலைகார மழையில்
முங்கிய நகரத்திற்கு பின்னோடிய
மும்பையை..

மீன்கூட்டங்கள் கண்ணாமூச்சாடிய
மணற்-அலை காதல்கள் நெளிந்த
மெரினாவைத் தின்று சுவாசித்த
பேய்ச்சுனாமியை..

முந்தாநாள்
முழுங்கிய ராசப்பனை
இன்னும் துப்பிவிடாது
இறகு விரித்திருக்கும் ஏரியை..

அம்மா விழிகளை
அவளறியாது விலகிய
குழந்தையொன்றின் விரல்களை
குறிப்பெடுத்த வெந்நீரை..

இதுபோல்..
அதுபோல்..
நீரின் தன்மையை
உவமைப்படுத்த ஒருபோதும்
உந்தாது மனப்பருந்து ,
கடலொன்றின் நடுநாவில்
காய் நகர்த்தும்
என் அண்ணனைப்போலுள்ள
கப்பலோட்டிகளை
கவனிக்கும் பொருட்டு ...


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4642:2010-03-08-07-11-03&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..



 ( அண்ணனுக்கும், கடல் சார்ந்து தொழில் செய்பவர்கள் அனைவர்க்கும் )

Saturday, March 6, 2010

காதலின் பெயர் பரிசீலனையில்..

பனியும் இலையும் பூத்திருந்த
அதிகாலையொன்றில் குழுமியது
நிரம்பி வழிந்த காதல்..

தொடர்ந்த நாழிகைகளில்
ஏதேதோ நிரம்பியும்
எதிர்வீட்டுக்குழந்தைகள்
மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த
அப்பொம்மையை மீட்டியதும்
எழும்பிய அக்கீச்சொலியில்
முற்றமிட்டது மிதமிஞ்சிய காதல்..

இப்படியாக ..
விட்டுக்கொடுக்கப்பட்டிருந்த காதலில்
அதோ, தலைகாட்டாமல் சிரித்துச்செல்லும்
அப்பெண்ணும் மறைமுகப்படுகிறாள் !


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31003054&format=html



நன்றி திண்ணை..

Monday, March 1, 2010

நிரம்பி வழியும் இசை..!


காற்றைக் கீறி
இசை பிளியும்
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
பயணப்படுபவளின்
துப்பட்டா வாசமுகர்ந்து
பின்தொடரும் அவ்வொருவன்,
இம்மழை இரவில்
அழகிய பாடலொன்றை
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்,
அப்பெண் இசைகோர்த்திருக்கக் கூடும்!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4417:2010-03-01-07-33-31&catid=2:poems&Itemid=88

நன்றி கீற்று..