Monday, October 25, 2010
வெற்றுடல் தேவதைகள்..
முகங்களற்ற
நிழல்களற்ற
மழை பூத்த சாலையில்
இன்னல் தனிமையைத் தூவிச் செல்வதற்கென
அமையப்பெறுகிறது அவனுக்கு
அம்மதியப்பயணம்..
தலை நொடித்து கற்கள் கொஞ்சத்தை
உள்ளங்கை தனில் அடுக்கிக்கொண்டு
சாலையின் கடைசி வளைவில்
கால் மடித்துக் கொள்கிறான்.
கற்கள் ஒவ்வொன்றாகத் தொலைபடுகிறது..
தனித்த கைகளாகிய நிலையினில்
ஒரு அமைதியை அடையாளப் படுத்துகிறான்,
அமைதி அதன்பொருட்டு
அமைதியைத் தருவிக்கிறது..!
கன்னம்வழி வளர்ந்த நீரில்
கடுமையாக உப்பின் வாசம்..
காற்று கொணர்ந்த இசையில்
உப்பின் அடர்த்தி குறையக் குறைய..
பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது.
நன்றி உயிரோசை..
Monday, October 18, 2010
சுயம் தொலைதல் அல்லது தொலைத்தல்..
முழு நீலக்கடலில் கோடிநட்சத்திரங்கள்
அம்மணமாய் ஆடித்திரிவதை
நாய்கள் குரைக்கும் நடுநிசியில்
வோட்கா பாட்டிலிலும்
ஆறாம் விரலிலும்
ரகசியமாய் வழித்துக்கொண்டிருந்தேன்..!
முடியாது நீண்டிருந்த அவ்விரவின்
மற்றொரு கனவில்
தடித்த ஸ்தனக்காரி வற்புறித்திய வண்ணம்
வருத்தி பின்தொடர்ந்திருந்தாள்..
பின்னொரு கறுத்த ஆடு
தலையற்று முண்டமாகி
தடாகத்தில் சிவத்த இரத்தத்தை
வழியவிட்டபடி செத்துக் கொண்டிருந்தது..
கனவுகள் நிறைய நிறைய பேசியதோடே..
ஆழ்வானத்தின் சிறுதுளையில்
மழிந்து மாய்ந்துகொண்டன.
அந்த ஒரு இரவு
விடிந்தபாடில்லை
இன்னும்...!!
நன்றி உயிரோசை..
Subscribe to:
Posts (Atom)