Monday, July 30, 2012

இருந்திருந்தும்




யாதொரு பார்வைக்கும்
அது  
ரோஜா இதழாக இல்லாமல் போவதை
அறிந்திருந்தும்

தேவதையின் சாத்தான் நிரம்ப விளம்பும்
ஆசிர்வாதம் பெற்றவன் நானென்பதில்
மிகுகர்வம் கொண்டு உக்கிரத்தாண்டம் பூண்டு
வியாபிக்கும் நமது காதலின்
நகக்கண் உபயோகித்து
ஒரு மெல்லிய ரோஜா இதழை
வரைந்து பார்க்கிறோம்

ஆலயத்து வௌவாலின் கூக்குரலோடு
நம்மை உண்ணக் காத்திருக்கிறது
பாசிப்படர்ந்ததொரு பெரும் பாறை

நன்றி உயிரோசை

வர்ணங்கள் பூசப்பட்டிருக்கும் பாவனை






கவிதைக்குள் அழைத்துப் போகிறாய்
அல்லது
அழைப்பதுபோல் பாவனை செய்கிறாய்

நீ பூசியிருக்கும் 
உன் மனைவிக்கும் மகனுக்குமான
வேதனைக்கும் அன்பிற்கும் நடுவில்
எட்டிப்பார்க்கும் என்னை

சொற்ப நொடிகளில் வெளியேற்றுகிறாய்

பின் 
மிகுசிரத்தையோடு ஒரு துரோகத்தை அழிக்க
மெனெக்கெடுகிறாய்

இன்னும் நான் முழுமையாக உள்ளிருந்து
புறப்படவில்லை என்பது
வாய்ப்பில்லைதான் நீ அறிந்திருக்க

நன்றி உயிரோசை


அன்பே







மேலும் சொல்வதற்கென்றால்
இத்தருணம் என்னோடு இல்லாத என்னை
கத்தி போன்ற உனதன்பு கொண்டு
மெல்லிய புன்னகை செய்து
விளையாட்டாக நகர்கிறாய்

நான் நின்ற இடத்திலிருந்தே
உன்னை வாழ்த்துகிறேன்
என்னைத் தீர்த்து

நன்றி உயிரோசை


Sunday, July 29, 2012

அள்ளிப் பருகவென







சிற்றெறும்புகள் சில 
சர்க்கரையில் புணர்ந்து கொண்டிருந்தன,  
பின்னிரவில்
நமது படுக்கையறைக்குள் நுழைந்திருந்த
குண்டு ஒல்லி ஜோடி எறும்பை
உனக்கு அறிமுகப்படுத்தினேன்

தேநீருக்குப் பதில்
இளம் மழைக் காலையொன்றில்
அள்ளிப் பருகு என
நீ வெட்கத்தைத் தருகிறாய்

நன்றி உயிரோசை


துயரத்தைக் கொண்டாடுதல்



யாருமற்ற தனித்த தீவில்
நிறைந்த இருப்பாய்
நீந்தப் பழகுதலின்
உனது ரகசியக் குறிப்பொன்றை
இறுதியில் களவாடுகிறேன்

சற்றே துயரத்துடன்
மனமீன்கள் கொத்தி உண்ணும்
என் அந்தரங்கப் பரிபாசையை 

கடல் மேல் துள்ளும்
இம்மழைத் துளிகள் தான்
எவ்வளவு அழகு

நன்றி உயிரோசை

Saturday, July 21, 2012

***



உன் அன்பின் இசை
மௌனத்தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும்
வேட்கையின் நிறம் கொய்யும் மழை
பெரும் நிலம் பெறும் தானே

Friday, July 20, 2012

ம்



மரணத்திற்குப் பின்னால்
மரணம் பேசும் நாம்
எதற்கு
இப்போதைக்கு
வாழ்வோம் வா
நிறைந்த இருப்போடு  


***







பெய்யும் மழை
நின்ற மழை
தீரா ரணம்

***






எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வை நகர்த்திப் போகும்
உந்தன் மனதை இவ்வளுவு வன்மத்தோடு உண்கிறேன்
நீயோ ஒரு துளி கண்ணீரும்
சேர்ந்தவாறே ஒரு சிறு புன்னகையும் பிரசவித்துவிட்டு
என்னைக் கொல்லாமல் கொல்கிறாய்

***



உடைந்து ததும்பும் கண்ணீர் உதடுகள் ஏந்தி அணைப்பாயா
மன்னிப்பாயா உனது ரோமக்கால்கள் கொண்டு
வாழ்ந்து விட்டுப் போகிறேன்
வாழ்வோடு

Wednesday, July 18, 2012

சரணாகதி



பிரிவதிற்கில்லை
இனி எப்பொழுதும்,
இறுதியாக
விடுதலையைத் தருவிக்கச் சொல்லிக்கேட்டேன்
சிறிது யோசனை செய்கிறாய்
ஒரு பறவையைப் பரிசளித்தாய்

நன்றி உயிரோசை

 

உணர் அழகு






பயணங்களின் நிறம்
வானவில்
மேலும்
நாம் நம்மோடு இருத்தல்

நன்றி உயிரோசை


***



நீங்கள் தண்டிக்கப்படக்கூடியவர்கள்
நானொரு
பெருங்குற்றம் உடைய
நிரபராதி

நன்றி உயிரோசை

டேய் தம்பி கையைத் தூக்கி உன் பெயரைச் சொல்லு



அங்கே எங்கேயோ சப்தம் கேட்டது 
நிறையப் பெயர்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனையில்
பெயரில் என்ன இருக்கிறது,
எல்லாமும் என்றார் ஆறுமுகச்செட்டியார்
முனியாண்டித்தேவர் ஆமோதித்தார்
சாந்தி இருவரிடமும் சரிசமமாகப் பணம் வாங்கினாள்
ராமமூர்த்தி சித்தப்பா சாக்கடையோரம் நட்டநடுப்பகலில் நள்ளிரவைத் தாண்டியிருந்தார்
முருகன் அண்ணன் தன் பெயரை தன் நினைவில் அல்லாது வளையல் பொறுக்கிக்கொண்டிருந்தான்
இந்திராணியம்மா கோவிலுக்குப் போகிறாள்
கோகிலா அக்கா தூக்கு மாட்டுகிறாள்
அஞ்சலிப் பாப்பா தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்குது
பால் வாங்கப்போன முருகேசநாடார் நாலு நாளாச்சு; இன்னம் காணல

நன்றி உயிரோசை

 

Monday, July 16, 2012

***



நீ உன் வரம்பிற்குள்ளும்
நான் என்
வரம்பிற்குள்ளும்
இருத்தலுக்கு
என்ன பாவம் செய்தது
நட்பு நண்பா

மன்னிப்பு அவசியப்படும் ஒன்றா



யாரும் யாரோடும் இருக்கலாம்
நான் யாரோடும் இல்லை
நம்பிக்கை, வருந்தாதே

Sunday, July 15, 2012

நம்பிக் கொண்டேயிரு



இந்த இரவிற்கு முந்தைய இரவில்
உன் கடவுளும்
என் சாத்தானும்
எங்கு போனார்கள்?

Thursday, July 12, 2012

***






தூக்கத்தில் விழிகள் உதிர்ந்த
விடியல் வேண்டுமெனக்கு
எல்லா போதையும் தீருமொருநாள்
காத்திருத்தல்தான்
எத்தனை வலிக்கிறது

பிரிவின் மொழி



பார்வையிலிருந்து உடைந்து விழும்
அக்கண்களை அள்ளிக்கொண்டு

மௌனப் பெருங்கிணற்றின்
மனச்சுவர் பற்றி மேலெழும்பும் வார்த்தைகள்
வாதையோடு திரும்புகின்றன

நன்றி உயிரோசை





இடறி விழுந்த கருணை



பஞ்சின் கனம் கொண்ட ஒரு கருணை
இப்பொழுது
என்னைச் சல்லடையிட்டுத்
தேடிக்கொண்டிருக்கும்

மதுவருந்திய தருணம்
மிளிர்ந்த
ஞானம் வெட்டுண்டு கிடக்கிறது
உக்கிர வெயில் வானத்திலென
அறியாது

ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாதென
அதுஎப்பொழுது விழுந்தடித்தோடியதோ
எனது கிழிந்த பாக்கெட்டிலிருந்து?

நான் நடக்கும் சாலையில் தினமும் கவனிக்கும்
அழுக்குப் பிள்ளையோடு சிக்னலில் நிற்பவளுக்கென
நிரம்ப யோசனை செய்து

ஒரு வாட்டர்பாக்கெட்டைக் கேன்சல் செய்து மீதித்திருந்த
அஞ்சு-ரூபா காயினை ரொம்ப நேரமாச்சு,
தேடிக்கொண்டிருக்கிறேன்

நன்றி உயிரோசை

எனக்கு மனப்பிறழ்வைக் கொடு இறைவா



பேரன்பின் அனார்
நானொன்றும் அவ்வளவு துரோகவாதியல்ல
யாசிகா மாதிரி

குழந்தைகளைப்போலக் கடவுளாக அல்லாது
வறுமையைப்போலக் குரூரச் சாத்தானாக
இன்னும் இருந்து இருப்பேனோ
இடையுண்ட நான்?

தற்கொலை செய்தவளுக்கு
இன்று மட்டுமே ஆறேழு முறை
அதே கனவு
திரும்பத் திரும்ப வந்துவிட்டதாம்

நன்றி உயிரோசை



Monday, July 9, 2012

***



உனது நதி
உனது பாடல்
தொலைந்தாவது போயேன்

***



தற்கொலைக் குறிப்பு எழுதும் இந்நேரத்தில்
நேரத்தை சாகடிப்பதற்குப் பதில்
நகர்ந்து போவதே உத்தமம் 

சூசைட்பாய்ன்ட்-ல் நின்று கொண்டு
பிரசவ அறையைப் பேசுகிறேன்

Friday, July 6, 2012

***






ஏன் நான் வருந்த வேண்டும்?
வளர்ப்பு நாயின் கனவில் நான்
கனவாகவே வந்து போனதில்
உண்டான தெருநாயின் கோபம் தொட்டு


***



மின்சாரம் தாக்கி மரித்த காக்கையோடு
பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
என்னைக் கடந்து செல்கின்றனர்
நான்கைந்து மனிதர்கள்
முனகியபடி
சிரித்தபடி
நகர்ந்தபடி

Thursday, July 5, 2012

வாழ்வின் எளிய வாசம்!







ஏதுமற்றதில் எல்லாவுமாய் இருந்து
மிக நேர்த்தியாக மீட்டிச் செல்கிறது
பெருந்துயரத்தின் கருணையற்றப் பிடியிலிருந்து
கடந்து செல்லும் பரிச்சயமற்றப் பள்ளிக் குழந்தையின்
ஒருஎளிய புன்னகையும்
சிறு கை அசைப்பும்!

நன்றி கீற்று




Tuesday, July 3, 2012

பாசாங்கற்றக் கூரை




உச்சபட்சக் கலவியின்
முனகல்கள் மோதல் கணம்
ஒருஆற்றில் விழுந்த
இரு சிற்றெறும்பென

சொட்டிச் சொட்டிப்
பனியுமிழ்த்துகிறது
நிகழ்த்தப்படும் முத்தங்கள்
மழைக்குப் பிறகான தூறலாய்


நன்றி உயிரோசை

வாக்குமூலம்




கருணையற்ற வருகையை
குற்ற முகத்திற்கு ஒப்புக்கொடுக்கத் தயாராகும் முன்

ஒரு நூற்றாண்டுக் கிழமைகள்
சாய்ந்திருக்கிறது
தன்னோடும்
தன் அறுந்த நிலத்தோடும்

நன்றி உயிரோசை

Monday, July 2, 2012

உயிரோடு வாழ்தல்!



இந்நீளவானம்
ஒரு துண்டு நிலவு
ஆகையில்,
வெட்கமெனும் உயிர் நதியாய்
துளிர்க்கிறது சுனை!

நன்றி வல்லினம்.காம்