Saturday, December 31, 2011

தாகம்





அலைகடலில் மிதக்கும்
நிலவின் வெள்ளொளியில் முகம் காணும்
இரவை கடத்தி படுக்கையில் உலர்த்துவதாய்
கண்ட அந்த அபத்தக் கனவை
சாமத்தின் வாசலில் குரைக்கும்
தெருநாயின் காது திருகி சொல்கிறேன்.

பின்
பின் மதியப் பூனையாய்
அவள் முலையருந்த,
வேட்கை கனலின் விரல்கள் மீது
திரும்புகிறேன்.

கொலுசு கால்களின்
இசை வழியே நிரம்புகிறது
அன்பின் ஊற்று.

Tuesday, December 27, 2011

மழை இரவில்







மழையோய்ந்த முன் இரவின்
விடியலில்
சொட்டிக்கொண்டிருக்கும் துளிகளென
வசீகரிக்கிறாய்.

தெளிந்த நீரோடையில்
ஒரு இலை உலவுவதைப்போல
அத்தனை அழகியலாக
என்னுடல் பற்றுகிறாய்.

அன்பின் ஆயிரங்கரங்கள் கொண்டு
அத்தனை மெலிதாய் புன்னகைக்கிறாய்.

புன்னகைக்கும் போதே
இனியும் கோடை வருமென்கிறாய்.

ஒரு சிறு கைப்பிடியினைச் சுற்றும்
கொடியென தன்னை
இறுகப் பற்றிக்கொள் என்கிறாய்.

கோடையொன்றும்
அத்தனை வெம்மையோ
அத்தனை தனிமையோ அல்லவென
நம்பும்படியாகச் செய்துவிடுகிறாய்.


இன்றிரவும் மழை பொழியுமாயின்
அதனின் சில துளிகளை
உன் கைக்குட்டையில் கோர்த்து
பின் வரும் கோடையில்
உலர்த்தலாமென நிசப்தமாகிறேன்.


நன்றி உயிரோசை..


Tuesday, November 22, 2011

இயலாமை






அன்பு ததும்ப அழைப்பதாய் அழைக்கிறாய்
வரவேற்பறையில் அமர்ந்து விவாதிப்போமென்கிறாய்
ஒரே ஒரு நாற்காலியே அங்கு போடப்பட்டிருக்கிறது
அமர்ந்து கொள்கிறாய்
குவளை நிறைய அவமானத்தை தருகிறாய்
தேநீரெனப் பருகச் சொல்லுகிறாய்
நீ மட்டுமே பேசிக்கொண்டிருகிறாய்
'ம்' சொல் என்கிறாய்
நல்லது என்கிறேன்
குரூரமாய் புன்னகைக்கிறாய்
நடந்தவைகளை மறந்து விடுமாறு கட்டளையிடுகிறாய்
நடந்து கொண்டிருப்பவைகளின் குற்றவுணர்ச்சி ஏதுமின்றி
பின் வெளியேறுமாறு உக்கிரமாய் கண்ணசைக்கிறாய்
இறைந்து கிடக்கும் அவமானத்தின் நிழலை இறுக வாரி
கழுத்து திருகி கொன்று விடலாமென குனிகிறேன்
உனது முதலாளித்துவம்
எனது முதுகில் ஓங்கி ஒரு போடு போடுகிறது.


நன்றி உயிரோசை..


Monday, November 14, 2011

திரும்புதல்




உனது எல்லா விடுபடுதலிலும்
எனது பெருங்காதலே
மீச்சிறுபுள்ளியென
ஆகச்சிறந்த கவிதையொன்றை
விமரிசையாகக் கொண்டாடுகிறாள்
நம் இருவருக்குமான தோழி.


நன்றி உயிரோசை..

Monday, October 24, 2011

அவர்கள்







உன் இருள் நிழலில்
மின்னிப் பறக்கிறது
என் தூய ஆவி.

இருப்பது போல்
இல்லாமலிருத்தலில்
இருந்ததை விட
அத்தனை வெளிச்சம்
அத்தனை அடர்த்தி
அத்தனை மென்மை.

கானகம் நுழைந்து
காணாமல் போவதும்
திரும்பி வருதலென்பதும்
ஒரே மாதிரியான நிகழ்வே
அல்லது
"அல்லது" அல்லதாகவே இருக்கட்டும்.

நீ சொல்வது போல்
நான் அந்நதியென
இல்லையெனினும்
நாளைய மழையின்
முதல் துளியாகவே
பிரிகிறேன்.

பச்சைப் புற்களின் நடுவே
நல்ல பாம்பொன்று
சுருண்டு கிடக்கிறது.
நான் அதை நீ என்கிறேன்.
நீ அதை நான் என்கிறாய்.

அது அதுவேயில்லை
வேறொன்றென சொல்லிப் போகிறார்கள்
கடக்கும் இவர்கள்.





நன்றி உயிரோசை..


 

Friday, September 16, 2011

நிலைப்பாடு




சொற்களின் காட்டுக்குள்
பெருந்தீயாகப் பரவுகிறாய்
உனது இருபெனும் மாயையினை
நிலைப்படுத்த.

பின்னொரு பொழுதினில்
தனிமையின் பெருங்கடலை
ஓவியமாக்க முயற்சிக்கிறாய்
எரியும் ஒற்றை அகல் வரைந்து.

முன்னெப்பொழுதோ
பெய்யாதிருந்த  மழை
ருத்ரதாண்டவமென
தீபத்தை குரூரமாக விழுங்கிப்போகும்
இவ்வேளையினில்

மேலும்
அவனைப் பற்றி விரிவாக
உரையாட ஏதுமில்லை.


நன்றி உயிரோசை..

Wednesday, July 13, 2011

பிறகு




தற்கொலை செய்து
இரு தினங்களுக்குப் பிறகு
மிக அழகாக ஒப்பனை செய்துகொண்டு
ஒரு மெல்லிய புன்னகையோடு
வந்தமர்கிறாள் அபர்ணா.

அந்த அபத்த கனவையும்
அந்த வதையுள்ள ஏமாற்றங்களையும்
அந்த முகமூடி மனிதர்களையும்
அந்த துரோக ஊசியின் கூர்முனையையும்
அந்த நம்பிக்கையின் உடைந்த சில்லுகளையும்
அத்தனை நிதானமாகப் பேசத்துவங்குகிறாள்.

பிறகு இருவருக்குமாக
நல்ல சுவையுடைய தேநீரை
தயார் செய்கிறாள்.

நான் என் கனவின் ஓட்டைகளை
சரி செய்வது பற்றி
தீவிரமாக எண்ணத் துவங்குகிறேன்.

சலனமேதுமின்றி அவள்
என் விரல்களை கோர்த்தவாறு
தான் செத்துப் போயிருந்த தன் கனவை
சின்னச் சின்னத் துண்டுகளாக்கி
தேநீரோடு சேர்த்துப் பருகுகிறாள்.

நானும்
நானெனும் பிம்பமும்
கொஞ்சம் கொஞ்சமாக
உடைந்து சரிகிறோம்.

Monday, July 4, 2011

பெருவனம்







பெய்யாத மழையின் நிலமெங்கும்
பிரிவின் வாதை
என்கிறேன் நான்.
அது
அன்பின் வதை, 
பேய்மழையின் நிலமெங்கும் நீ
என்கிறாள் அவள்!


நன்றி உயிரோசை..


Monday, June 27, 2011

அரேபிய ராசாக்கள்.. 16









மீளத் திமிரும் கானலென
பாலையெங்கும் தவித்தலைகிறது
நீ இட்டனுப்பிய உப்பு முத்தம் !

சொற்களின் வனம் புகுந்த
ஆகாய நேசம்
கடலின் நட்சத்திர எதிரொளிக்கான
காத்திருத்தலில் !

வாழ்வின் பெருவெளியில் சிக்கிச்
சாயும் கறுநிற நிழல்களனைத்தும்
ஜனிக்கும் மரண பிம்பங்களாகவே
மொழி பெயர்க்கப்படுகிறது..!




நன்றி உயிரோசை..




















Monday, June 20, 2011

இயல்பின் நிழல்







ஒரு அபரிமிதமான நம்பிக்கை
உடைபடும்போது எழும் மன அழுத்தத்தின்
நம்பகத்தன்மையை தீர்க்கமாய் அகப்படுத்தியவாறு
தொடரும் இருப்பினில், 
சட்டென நுழைகிறாய்
ஆட்காட்டி விரலளவு அன்போடு !

சற்றும் எதிர்நோக்காதிருக்கையில்
இயல்பின் நிறத்தை தெளிக்கிறாய்
இருப்பின் நிழல் எங்கும்.

சாயுங்காலத்தில் நழுவிச் செல்லும்
சூரியனின் வலங்கை பிடித்து 
இரவை உதிர்க்கும் நிலவின் பெருமுகத்தில்
உன் பெயர் பதிக்க
நானோ அலைகிறேன்
இவ்வறண்ட வெளியெங்கும்.

புரிதலின் பெரிய குழப்பத்தினில்
கால் நனைத்துவிட்டு வா 
விரல்களை இறுகப் பற்றிக்கொள்வோம் ! 


நன்றி உயிரோசை..


Monday, June 6, 2011

காதலின் வேட்கையோடு







உடலிலிருந்து உதிர்ந்து விழுந்த

நிழலை இறுகப் பற்றி
மௌனம் கலைக்கிறது
முகில்களடர்ந்த இரவு..

உயர  உயரப் பறக்கவிடப்பட்ட
வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்களை
தன்னிடத்து வைத்திருக்கும்
மெல்லிய சிறு சிறு விரல்களைப்போல,

மகிழ்வின் ஒப்பற்ற கடலில்
மெல்ல இறங்கும் இந்தப் பௌர்ணமி நிலா
ரகசியத்து இட்டுச்செல்கிறது
அன்பின் ஒப்பத்தை.!

கூட்டத்திலிருந்து
கைகள் அள்ளிய ஒற்றை நட்சத்திரம் ,
அவளுக்கென தருகிறேன்.

நிழலென உதிர்ந்தவள்
வெட்கத்தின் புதிர் புன்னகையோடு
கட்டிக்கொள்கிறாள்
இரவு நிறைய நிறைய.!


நன்றி உயிரோசை..


Monday, May 30, 2011

தோல்வியின் பெருவெளி !







அச்சொல் விழுந்தொடிந்த கணம், 
நதியென அலையும் நினைவின்
பல்லக்கில் ! 

முன்னெப்பொழுதுமில்லா
அடங்கா வெறுமையுடன்
வறுமை படர்ந்த விழிகளென
பனித்திருக்கிறது வெளிச்சம்.

பிரிவின் உடைந்த நாற்காலியில்
இருத்தல் மெல்ல நகர்கிறது
காற்றில் ஒரு சிறு இலையினையொத்து..

என் தீக்கனவில்
அவளின் புது வீட்டை
பழைய சாக்கடைப்
பின்தொடர்வதாய்
எழுதி வைக்கிறீர்கள் என்னை..!

தோல்வியின் வெளியெங்கும்
எனது ஒற்றைக் காதல்.


நன்றி உயிரோசை..


Monday, May 23, 2011

அரேபிய ராசாக்கள்.. 15







புறக்கணிப்பின் நிறங்கள்
படிந்து கிடக்கின்றன
இப்பாலையின் பெருவெளியெங்கும்
கானலைப்போல.

கதைகள் பல நிரம்பியிருக்கும்

இம்முகங்களின் பார்வை கானகத்தில்
ஒரு வயோதிகனின் இருப்பென
படர்ந்திருக்கிறது
வலியென்பது.
நிழல்கள் அனைத்தும்
மரித்த பிம்பங்களென
ஒட்டிக்கொள்கின்றன
அறையின் இரவினிடத்து..!

தெவங்கி தெவங்கி அழும்
அப்புதியவன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை,

நாட்கள் திங்கும்
இத்தலைகள்,  
இயலாமையின் உச்சத்தில்
பிறகெப்பொழுதும்
வெறுப்பையே தன்னிடத்து
நிலைப்படுத்தியிருக்கிறதென்பதை.


நன்றி உயிரோசை..

Tuesday, May 17, 2011

அனகாவும் மழையும் !







இந்நாட்களில்
எவருக்கும் பெய்யாத மழையை
தன் பிளாஸ்டிக் செடிகளுக்குப்
பெய் பெய்யென
அறையிலிருந்த மழை சித்திரத்தை
தட்டித் தட்டிக் கொண்டிருந்தாள் அனகா!

அலுவல் முடித்த களைப்பில்
வீடு சேர்ந்த அம்மாவின்
கைகளில் அகப்பட்ட மழை
அனகாவின் கண்களிலிருந்து
சுரந்து தரப்பட்டது!


நன்றி உயிரோசை..

Tuesday, April 5, 2011

அதிர்வு



எறும்பு மொய்க்கும்
காலி தேநீர் டம்ளரில்
சுவை மிச்சமிருக்கிறது.

மேகத்தின் கால்களில்
ஈரம்
மழை குறிப்பெழுதுகிறது.

ஒரு கூட்ட நெரிசலில்
ஏதோவொரு அவன்
ஏதோ ஒரு அவளைத்
தேடுகிறான் அல்லது
தொலைத்துவிடுகிறான்.

தனித்துக் கிடக்கும் பாறையில்
நத்தையொன்று மெல்ல
இடம் பெயர்கிறது.

பக்கத்து காற்று
தூரத்திலேதோவொரு கிளையை
உடைத்து வந்திருக்கிறது.

சிறுவர்கள் இரண்டுபேர்
மணல்வீடு கட்டித்தீரும் தருவாயில்
தங்கைப் பாப்பாக்களை
அழைத்துக் கொண்டாடுகின்றனர்.

கடலில் அலை
இன்னும் மிச்சமிருந்தது.





நன்றி உயிரோசை..

Monday, March 28, 2011

அதற்குப் பின்னும்






உன்னை அல்லது
உங்களை அறியாத
பெருநகரத்தில்
கொசு ஒன்று செத்து
இரத்தம் புறங்கையில்
வெறுமெனே காய்ந்து கொண்டிருந்தது.

மின்வெட்டின் மிச்ச இரவு
விழித்துத் தீர்ந்தது.

கார்பரேட் கம்பெனி வேலைக்கென
அடுக்குமாடிக் குடியிருப்ப்பு
விரைந்து நகர்ந்தது.

சிக்னலில்
ஒரு அரைக்குருடி
பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே
யாசித்திருந்தாள்.

இரு சக்கரனொருவனின்
கெல்மெட்டில்
மற்றொரு ஈ
ஒன்றுக்குப் போனதை
தெருநாயொன்று கண்டு
வள்  வள்ளென்றது.

நான் வழக்கம்போல
டீக்கடையொன்றில்
அத்தியாவசியமான
தற்கொலைச் செய்தியை
தினசரியில் சுவைத்துத் தீர்த்தேன்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 15, 2011

புறக்கணிப்பு







ஒரு அற்ப தருணமென
விலகுகிறேன்
உனது பெருங்கூச்சலிடமிருந்து.

மௌனத்தின் ஆயிரங்காதுகளை
சாதுர்யமாக்கும் இருப்பிலல்ல
இந்த ஒற்றை இதயம்.


நன்றி உயிரோசை..


Tuesday, March 8, 2011

அறிவிப்பில்லா விடைபெறல்








ஒரு இருள்சூழ்ந்த இரவில்
எஞ்சிப்போன
ஒரு கெட்ட சொப்பனம்தான்
இந்த துர்செய்தி.

அகாலத்தின் படிக்கட்டுகளிலிருந்து
மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும்
அதன் சிவந்த கண்களில்
விடியலற்ற ஒரு பகல்

நகக்கண் அழுக்கைப்போல
துல்லியமாகத்
தன் இருப்பைத் தெரியப்படுத்துகிறது.

ஒரு மரணச்சம்பவத்தின்
அசை
இதனைக் குரூரமானதென்பதை
அவன்
இதற்குமுன் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடியலற்றப் பகலுக்காகவே
விழித்திருக்கிறான்
அவன்.

நன்றி உயிரோசை..


Monday, February 28, 2011

வனம்







ஒரு பசித்த மிருகத்தை
தொட்டுத் தடவுதல்
எத்தனை அபத்தமோ,
அந்த மாதிரியாக நிகழ்கிறது
எமது இரவின்
புணர்தல் வேட்கை.


நன்றி உயிரோசை..


Tuesday, February 22, 2011

தோழமையின் ஆல்பம்




ஒரு வண்ணத்துப்பூச்சியின்
மரணம் பாதித்ததிர்ந்த
மழலையென நகர்கிறது
தோழியிடம் சொல்லத்தவிர்த்த
எனதன்பு.

நாளையும் வருகிறாள்
எல்லா வடிவிலும்
தனதன்பைத் திரும்பத் திரும்ப
என்னிடம் உமிழ்ந்துகொண்டே
திரும்பிவிடுகிறாள்.

நன்றி உயிரோசை..

Friday, February 18, 2011

நிக்கோடினை உலர்த்திய புன்னகை







ஒரு பட்டாம்பூச்சிக்கு
துப்பட்டா சுற்றியது
மாதிரி இருந்தாள்
அந்தப் பள்ளிச் சிறுமி.

அவள் பென்சிலும்
ரூல்ட் பேப்பரும்
வாங்கிச் செல்லும் வரை
நிக்கோடினுக்குத் தீயிடாது
நிதானித்திருந்தேன்.

பள்ளி காம்பவுண்டினுள்
நுழைந்த பின்னான
மூன்றாவது பாதத்தில்
திரும்பியவள்
ஒரு குட்டிப் புன்னகையை
வீசியெறிகிறாள்! 



நன்றி இந்த வார ஆனந்தவிகடன்.  

Tuesday, February 8, 2011

மாய வலை







பல ஆயிரந்துண்டுகளாக
வெட்டி வீசப்பட்ட
நிலாவை நட்சத்திரங்களாக்க
சந்தர்ப்பம் தேடுபவளாய்
எனது பெரிய பெண்குழந்தையும்

பல்லாயிர  நட்சத்திரப்புள்ளிகளை
ஒற்றை நிலவாக்க முயல்பவளாய்
என் இளைய மகளும்

ஒரு புரிந்துகொள்ளாமையின்
அபத்த இரவில்
கக்கூஸை மூடிவிட்டு
அழத்தொடங்குகிறேன்.

நன்றி உயிரோசை..





Sunday, February 6, 2011

நகரத்தைப் புணர்தல்






டிராபிக் நேரத்து
ஸ்கூட்டிப் பெண்ணின் 
டைட் பேண்டில்
தளர்ந்து கொண்டிருந்தது
எனதுப் பெருநகரத்தின்
வெறுமை.

Tuesday, February 1, 2011

மௌனத்தின் நிழல்




மௌனத்தின் மரணத்தை
என் கனவின் பெருவனத்தில்
அனாயாசமாகப் புகுந்து
ஒரு மரம் ஏறும் அணிலைப்போல
வெகுவிமரிசையாக கொண்டாடுகிறாள்.

ஒரு மயான நிசப்தத்தில்
ஒரு நதியின் சப்தம்
கலவுவதாய்
இரவின் நிழலைப் படிக்கிறேன்..


ஒரு சிறு புன்னகையை
எழுத வார்த்தைகளற்று
நொடிகிறேன்..! 


நன்றி உயிரோசை..



Wednesday, January 12, 2011

துயர்பறவையின் உடைந்த சிறகு..!






பல்லி விழுந்த பாலெனப்
பருகத் தரப்படுகிறது
கோப்பை மௌனம்.

குறியீடுகள் விழுங்கிய
பாம்பென பாறையென
விம்மித் தும்முகிறது இதயம்.

உச்சபட்ச நிராகரிப்பின் கசப்பில்..

வரைபடத்தின் முனைகள் மடக்கி
கப்பலென செய்து
பால்யத்தில் மிதக்கலாம்
எனப் புலம்புகிறாள்
மென்று துப்பிய நாவும்
சிவந்த கண்களும்
வீங்கிய கன்னங்களுமாய்
தோல்விப் பெண்..!

நன்றி உயிரோசை..

Monday, January 3, 2011

உருகி வழியும் பகல் !






எதிர்வீட்டு கோமதிஅக்கா குழந்தையிடம்
இனி உங்கஅப்பா வரவேமாட்டாரென்றேன்
கண் மீறிய நீருடன்,
அதற்கது தெரிவித்த முகபாவம்
போனவாரம் சாமிட்டபோன
அதோட நாய்குட்டிக்கு
லாவகமாய் பொருந்திப்போனது
பால்யத்தின் பிழையன்று ! 

அதே குழந்தை
அதே டெடிபியர்
ஓரிரு நாட்களுக்கு
விளையாடுவதற்கு மட்டும் தடை
புரியாது
அழுது அடம்பிடிக்கும் பிள்ளைக்கு
தாத்தா மடி
தாய்மடியாகிப் போகிறது !

நன்றி உயிரோசை..