Wednesday, December 29, 2010

மீள்வருகைக்கான நேச இணங்கல்..


கையாண்ட சொல் பிசுபிசுப்புகளை
எதைச் சொல்லி நிராகரிப்பது
என்ற ஒன்று இருந்துவிடுகிறது

அவர்களின் மௌனப்பைக்குள்
ஒரு கூர்தீட்டப்பட்ட கத்தியினை யொத்து.

மறுசந்திப்பிற்கான
ஆயத்தக்கூறுகள் நெய்து,  
ஒரு விரும்பத்தகாத் தர்க்கமென
விசும்பிக் கிடக்கும் நேசத்தின்
ஆழ் மனங்களை
ஒரு கோப்பைத் தேநீரிலிட்டு
கலக்கி குடிக்கும்
அந்த ஒரு தீர்க்க முடிவினை
பரிசீலனையில் அடைத்துப் பூட்டிவைத்திருப்பதாக
ஒருவர் மாற்றி ஒருவர்
கைப்பட கடிதம் எழுதிய
அந்த ஏகாந்த வேளையில், 
ஒரு காதல்
இசைந்திருக்கிறது தான்இன்னும் இருப்பதாக.

இயலாமையின் தீயில்
அந்த ஏகாந்தவேளை எரியுமுன், 
மீள்வருகைக்கான நேச இணங்கல்
ஒன்றைத்தவிர

யாதொரு நோக்குமற்ற
ஒரு பழைய டைரிக்குறிப்பு அதென
நீங்கள் உரக்கச் சொல்லலாம்  
அல்லது
என்னைப்போல படித்துவிட்டு மூடிவிடலாம்
யாருமறியாது ரகசியமாகவும் கூட!


நன்றி உயிரோசை..

Monday, December 6, 2010

அரேபிய ராசாக்கள் 14..






அமர்ந்த நாற்காலியில் இல்லாத நான்
கண்களை அகல விரித்தபோது
நகரும் படிக்கட்டுகளில்
நின்று கொண்டிருந்தேன்..

அரேபியப் புழுதியை
இதயத்தில் ஒத்தி
சற்று கைகளை நீட்டியபொழுது
ஆகச்சிறந்த நொடி இதுவென
கவனம் உணர்ந்தேன்..

மதியம் உண்கையில்
அம்மாவின் ஈரப்புனகை
சாம்பாரில் இனித்தது..

பின்-மாலைப்பொழுதில்
பிரிவு அறிந்தவர்கள்
சாக்லேட் புன்னகையோடு
சிறகுப்பறவை பறந்ததையும்
அழகுப்பெண் வணக்கத்தையும்
காதுகளில் முத்தம் கொண்டனர்..

அடர்வர்ண காலங்களில்
எனத் தொடங்கப்பட்ட
உரையாடலின் நடுநடுவே
ஈச்சமர வாடையும்
மணல் அலையும்
வந்து வந்து ஒட்டிக்கொள்கிறது..

இரவு உறங்கப் போகையில்
அப்பாவின் விரல்களில்
அன்பை பரிசுத்தமாகப்
பரிச்சயம் கண்டது
உச்சந்தலை..

விடுமுறை தீருமுன்
எப்படியாவது
காதலைச் சொல்லியாக வேண்டும்
கூடப் படுப்பவளிடம்..

பாட்டி தாத்தாவோடு
கதைபேசும் வெண்ணிலாவை
இம்முறையும்
கூட்டிப்போவதாகயில்லை
விமான வாசல்.


நன்றி உயிரோசை..

Monday, November 29, 2010

கடவுள் நேர்முகத்தேர்வில் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள்..!







பிரார்த்தனைக் கூடத்தில்
கூட்டம் கூட்டமாகப்
பிரார்த்திக்கிறார்கள்.

தப்பி ஓடிவந்து கொண்டிருக்கிறேன்
பேரிரைச்சலிலிருந்து.

புகைத்துக்கொண்டே மது அருந்துதல்
கணேசன் சித்தப்பாவுக்கு
மிகப்பிடிப்பதுபோல
தனிமையில் நமஸ்கரிப்பதை
அதிகமாக விரும்புகிறேன்.

கடவுளுடன் பேசுகையில்
கண்களை மூடிக்கொள்ளுதல்
எனக்குப் பிடிப்பதேயில்லை
முடிந்த கலவிக்குப்பின்
முத்தமிடாமல் கிடப்பதைப்போல.

பிரார்த்தனை நேரங்களில்
குழந்தை அழும் சப்தம்
காற்றில் கலந்து வருகிறதெனில்
கடவுள் நமது பிரார்த்தனையைக்
கவனிக்கிறார்
என்ற அர்த்தத்தில் எழுதப்படுவதை
நாளடைவில் வேறொருவன்
மீண்டும் எழுதிவைக்கலாம்
அல்லது
மனப்பூர்வமாக நம்பலாம்.

கடவுள் அல்லாத ஒருவன்
நம்பும்படியாகச் செய்யச் சொல்லும்
பரிகாரங்கள் அனைத்தையும்
கடவுள் அல்லாத நான்
எப்பொழுதுமே ஏற்றுக்கொள்வதில்லை
இப்பொழுதெல்லாம்
கோமதி சித்தி
என்னை அவ்வளவாக இஸ்டப்படுவதில்லை.

தன் மதம்அறியா
விநோதக் கடவுள்
தனக்குப் பசிப்பதாக
என்னிடம் வந்தான்
கடந்த இரவில்
பூத்த கனவில்..!

அதிகாலை தொடங்கித்
தேடிக்கொண்டிருக்கிறேன்
எனக்குப் பிடித்த உணவோடு..

கடவுளைக் கண்டால்
யாராவது அழைத்துவரலாம்
எனது முகவரியில்
நான் மட்டுமே பிரார்த்திக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன்
கடவுளைப் புறந்தள்ளுதல்
எனது நோக்கமல்ல.


நன்றி உயிரோசை..

Monday, November 22, 2010

வேறொன்றுமில்லை.






வியர்வைப் பிசுபிசுப்பில் கருகித் தகிக்கும்
உலோக அடைப்பான் பயணத்தில் 
நான் அடைந்த நகரம்
எனக்கு மிகப்புதிதாக இருந்தது..

நகர்தலின் அதிர்வு தாளாது
பித்துப்பிடிக்கிறது மனமும் உடலும் ஒருசேர
முதுகுமுன் மார்புகளை சிலாகிக்கும்
அப்பருவப்பெண்ணிடம்..

வலுவற்ற
ஒரு புன்னகையைத் தருவிக்கிறேன்
வழியற்றுத்
தலையில் செருகிக்கொள்கிறாள்..

கவனித்தலில்
சிக்னல் யாசகப் பிள்ளைகளுக்கென
ஒரு தீர்வும் எடுக்க இயலுவதில்லை..

பருவம் எய்க்காத
பெண்ணுக்கு
அடுத்த பேருந்தில்
அமையப்பெறலாம் பிரசவ வலி..

அவசியமில்லை,
காரணங்களைக் கண்டறியுமுன்
நிறுத்தம் வந்துவிடலாம்.

எனது நிறுத்தத்தில்..

ஒரு தேநீர் டம்ளரிலோ
ஒரு சிகரெட் புகையிலோ
ஒரு டாஸ்மாக் முட்டையிலோ
பழகிக் கொள்கிறேன் இந்நகரத்தை.


நன்றி உயிரோசை.

Monday, November 15, 2010

நிராகரிக்கப்பட்ட காகிதங்கள் உதிர்க்கும் மூச்சு..!






பிடிமானங்களற்று
உடைந்து கொண்டிருக்கும் நாட்களில்
பாழ்மண்டப வெளவால்களைப்போல
நடந்து திரிகிறேன்..

காகிதங்களில் அடைபட்டிருக்கும் உயிரை
ஏந்திக்கொண்டு
தெருத்தெருவாய் அலைகையில்
சுவாசம் முட்டுகிறது.

தற்சமயம்
ஒரு எரிமலை துப்பித்தள்ளும்
அடங்காத் தீயில்
மாட்டிக்கொண்ட
ஒரு பூச்சியினைப்போல
நேசிக்கப்படுகிறேன்
உங்களால்..!

முதல் சூரிய உதயம் ஞாபகத்திலில்லை
இக்கடைசி சூரியோதயம் மறப்பதற்கில்லை.


நன்றி உயிரோசை..

Monday, November 8, 2010

படிதல்.







சில காலைகளை
நேரிட நேர்கிறது
பனி இரவின்
செத்த சிகரெட் துண்டுகளோடும்
உடைந்த மதுவாடைக் குவளைகளோடும்

ஒரு பிரியத்தை தெரிவிப்பதற்கு
வாய்க்கப்பெறாத நாட்கள்
தொடர்ந்து ஊசிக்கொண்டேத்
தடயமாகிறது செத்துப்போவதற்கு.

அதிக சிரத்தையுடன்
அந்த அபத்தப் பொழுதின்
படி ஏறி நின்றுகொண்டு
பிரியத்தைச் சொல்லும்போது
எதிர்கொள்வதற்கு அவனோ அவளோ
இல்லாமல் போகின்றனர்.

வதங்கிய மௌனத்துடன்
கணம் துரத்தியடிக்கிறது
தவழ்ந்து கடக்கிறோம்.

சில இரவுகளை
நேரிட நேர்கிறது
வெயில் பகலின்
குரூர மரித்த ஸ்பரிசங்களோடு.


 நன்றி உயிரோசை..

Monday, November 1, 2010

இருப்பாலானது மற்றும் இருப்பிலாலானது..!






காரணங்களற்று இருத்தல்
அல்லது
காரணங்களோடு ஒத்துப்போதல்.

இடை இடையே
எங்கிருந்தோ உதிர்ந்து விழுகின்றன
வினவுகள்.

பலரும் அதில்
அநேகமாகப் பதிலும் கொப்பளித்து விடுகின்றனர்
அவை சமாளிப்பாகவும் இருந்து தொலைகிறது
ஆனால்..
அதில் பலரும்
அதனை சுட்டிக்காட்டத் தயங்குகின்றனர்.

நிரம்பத் தழும்பிய நரம்புகளுடன் சிறு இலையொன்று
காற்றில் முறிபடுவது
எப்பொழுதும் நடைபெறும் நிகழ்வே !

சில சமயங்களில்
கூர்ந்து உள்புக முற்படுவதில்
அலாதிப்பிரியம் எனக்கு..!


நன்றி உயிரோசை..

Monday, October 25, 2010

வெற்றுடல் தேவதைகள்..






முகங்களற்ற
நிழல்களற்ற
மழை பூத்த சாலையில்
இன்னல் தனிமையைத் தூவிச் செல்வதற்கென
அமையப்பெறுகிறது அவனுக்கு
அம்மதியப்பயணம்..

தலை நொடித்து கற்கள் கொஞ்சத்தை 
உள்ளங்கை தனில் அடுக்கிக்கொண்டு
சாலையின் கடைசி வளைவில்
கால் மடித்துக் கொள்கிறான்.

கற்கள் ஒவ்வொன்றாகத் தொலைபடுகிறது..

தனித்த கைகளாகிய நிலையினில்
ஒரு அமைதியை அடையாளப் படுத்துகிறான்,
அமைதி அதன்பொருட்டு
அமைதியைத் தருவிக்கிறது..!

கன்னம்வழி வளர்ந்த நீரில்
கடுமையாக உப்பின் வாசம்..

காற்று கொணர்ந்த இசையில்
உப்பின் அடர்த்தி குறையக் குறைய..

பதில்களற்ற எல்லா மடல்களும்
காகிதங்களாகத் தோற்றுப்போகிறது.


நன்றி உயிரோசை..

Monday, October 18, 2010

சுயம் தொலைதல் அல்லது தொலைத்தல்..







முழு நீலக்கடலில் கோடிநட்சத்திரங்கள்
அம்மணமாய் ஆடித்திரிவதை
நாய்கள் குரைக்கும் நடுநிசியில்
வோட்கா பாட்டிலிலும்
ஆறாம் விரலிலும்
ரகசியமாய் வழித்துக்கொண்டிருந்தேன்..!

முடியாது நீண்டிருந்த அவ்விரவின்
மற்றொரு கனவில்
தடித்த ஸ்தனக்காரி வற்புறித்திய வண்ணம்  
வருத்தி பின்தொடர்ந்திருந்தாள்..

பின்னொரு கறுத்த ஆடு
தலையற்று முண்டமாகி
தடாகத்தில் சிவத்த இரத்தத்தை
வழியவிட்டபடி செத்துக் கொண்டிருந்தது..

கனவுகள் நிறைய நிறைய பேசியதோடே..

ஆழ்வானத்தின் சிறுதுளையில்
மழிந்து மாய்ந்துகொண்டன.

அந்த ஒரு இரவு
விடிந்தபாடில்லை
இன்னும்...!!      



நன்றி உயிரோசை..  

Wednesday, September 22, 2010

நிழலென வளரும் மரம்..!


சக்கரங்கள் சுழலும் தண்டவாளங்களில்
உருளும் இசையென
மனம் பிரள்கிறது,
நிரம்பிய குடம் உடைந்து
பூ உதிர்ந்த தருணம்..!

குளுக்கோஸ் குழல் வழி
தெம்பூட்டப்படுபவளின்
ஆழக்கண்கள் பூவை நனைக்க,
அவள் புருவங்களுக்கு மத்தியில்
உதடுகள் உப்பி நீர் பதிக்கிறான்
பூ செய்தவன்..!

புதுப் புன்னகை ஒளி
வெளியெங்கும்
நிழலென வளரும் மரமாய் !

அழுது அழும் பூவுக்குத்
தேவதைகள் கதைசொல்லத்
தழும்பும் சமயம்,

நான் கொண்டுசென்ற பழக்கூடை
சிறு சிறு வர்ண நட்சத்திரங்களை
சிறகசைத்து தருவதாகவும்
அவற்றைப் பத்திரப்படுத்தி வைக்குமாறும்
அக்குழந்தைப்பூவே சைகை செய்கிறது
பிரசவஅறை ததும்ப..!


நன்றி உயிரோசை..

Tuesday, September 14, 2010

மிகநெருங்கிய மரணத்தின் கசடு..



யாருமற்ற குழந்தைக்கு ஒத்தடமாய்
இந்த நகரம்
என்னைத் தெருக்களில் நடத்திக் கொண்டிருக்கிறது..

இந்தப் போதைக்கு
எனக்கே என்னைப் பிடிக்காதிருக்கையில்
யாருக்கு என்னைப் பிடித்துவிடப் போகிறதென
வினவுவதாகவுமில்லை.

தொலைபேசியில் வந்த செய்தியை
நெடுநேரமாய் உமிழ்ந்தவாறே.. 
அது மட்டும் உறுதி, 
பதில் அனுப்பப் போவதில்லை
இம்முறை என்னை நான்
தோற்றுவிடப் போகிறேன்.

இருப்பதைவிட
இல்லாது இருப்பது
என்னை மிகசௌகர்யமாக இருப்பதாக
உணரும் தருணம் இது.

இப்பொழுதெல்லாம்,
கண்கூசும் பகலில்
பத்துக்குப் பத்து அறையைவிட்டு
வெளியெங்கும் நான் நடமாடுவதில்லை..

இரவுமட்டுமே பிடித்துப் போய்விட்டதோ யென்னவோ,
நெடுநாட்களாய் வானம்
பசியூட்டியவாறே குழந்தையைத்
தொடர்கிறது.!

எனது தொலைபேசியில்
நான் வாசிக்காத செய்திகள்
குவிந்து கிடக்கிறது. 


நன்றி உயிரோசை..

Thursday, September 2, 2010

எரியும் மெழுகில் நனையும் இரவு..





சிற்சில ஞாபகங்கள்
என்றுமே அழியாதிருப்பின் அடையாளமாய்
பழையதை யொத்த கடிதங்கள்
இன்னும் சிற்சில..
 
இன்றும்..! 

ஒரு மழைநாளில் தான் 
உருகி வழிந்தது இரவு
நமக்கான மெழுகில்..!

அம்மெழுகின் கதகதப்பு,

என் வாழ்வின் கதவடைபட்ட பின்பும்.. 
தீராக் காற்றின்
எல்லாச் சுவர்களிலும்
மோதிக்கொண்டுதான் வாழ்கிறது..

ஒரு முடிந்த உரையாடலின் 
எல்லாச் சொற்களிலும்
நீயே காதலி..

முடிவில்லா எழுத்துக்களின்
எல்லாக் கடிதங்களிலும்
நானே காதலன்..

மெழுகு உருகட்டும்..
இரவு நனையட்டும்..! 





நன்றி உயிரோசை..    

Friday, August 20, 2010

நேசப்பரிபாஷை..!


கடல்மேல் பறவையாகும் வானம்!

போன்றதொரு நேசப்பரிபாஷையினை
விழிகளிரண்டிலும் அழுந்தப் பிடித்தவளாய்..

என்னை மிக நெருக்கத்தில்
பருகச் சொல்லிக் கெஞ்சுகிறாள் !

அப்பொழுதும் என்னை நான்
மிகப்பத்திரமாக மௌனமாகவே
தொலைத்துக் கொண்டிருந்தேன்..!

காய்ந்த அந்த ஒற்றைரோஜா இதழ்கள்
மழையின் ஈசல் போல் 
அவளது மென்விரல்களில்
தன்னைச் செத்துக்கொண்டிருந்தது..

அப்பொழுதும் மௌனமாகவே வைத்திருந்தேன்
என்னை நான்..!

பிரிவின்..
கையடங்காக் குருதியினை... 

ஒரு முத்தத்தில்..

எரித்துவிடத் தயாரானவாளாகி,  
எனது வன்விரல்களை
மெல்லப் பற்றிக் கொண்டு
அழ.. அழ.. அழுதேவிடுகிறாள்...

நான் பெருமழையாகி
அவளை இறுகக் கட்டிக்கொள்கிறேன்..

பின் ஒருவானவில்லின் மேல்
இருவரும் கைகோர்த்து நடக்கின்றோம் !!

வண்ணத்துப்பூச்சிகளும்..
காதலும் ( "காதலென்ற ஒற்றை வார்த்தையில் அடங்கிவிடுவதல்ல அது!" )
எங்களுக்கானது.. எங்களுக்கானதே..!   


நன்றி உயிரோசை..   

Tuesday, August 10, 2010

நிலாவிளக்கும் மௌனஇரவும்..!



மழைநேரத்துக் குடைக்கும்
வெயில்மதிய நேரத்துக் குடைக்கும்

இடையானதொரு மெல்லிய ஊடலாய், 

தயங்கித் தயங்கி.. 

செதிலுரிகிறது வார்த்தைகள்,
பரிசுத்தமான கூடலுக்கு ! 

பிறிதொரு பரிச்சயப் பொழுதில்..
 
நிர்வாணம்
உச்சிமுகர் சொல்லாடலில் தழைக்கும்,
 
இந்நொடிவரை யாதொரு பிசிபிசுப்புமின்றி
மருகி அசைகிறதொரு நிலாவிளக்கு !

தயங்கித் தீர்ந்த கற்பனைக்கடலில்

தங்கமீன்நிற இரு பறவைகளின்
வெட்க மௌனங்களும்
முழுமையாய் இசைக்கத் துவங்க, 

அப்பேரலையின் வெளியெங்கும்
இயல்பானதொரு படுக்கையறைக் காட்சி ! 

எங்கோ ஒரு படுக்கை புணர்ச்சி கழிந்து
புன்னைகையோடு விடுபடலாம். 


நன்றி உயிரோசை..    

Monday, August 2, 2010

அரேபிய ராசாக்கள் 13..


மழைபோல் பெய்யும் வெயில்,
எழுத எழுத எழுதிவிடு
வரியைப் போலல்ல வாழ்வு.

மலரென விரியும் இருள்,
பிழையாயினும்
வக்கற்று எரிகிறது
இளம் மூங்கில்..

மெல்லப் பரவும் காற்றின் திசையில்

ஒற்றைச் சிறகின் நிழல்,
புனைவிரவின் ஈர நெடி.

ஒரு அரேபியா
ஒரு பாலை
ஒரு கானல்
ஒரு நிஜம்.

யாசிப்பு யோசனைக்கு மறுதலித்தும்,
ஒலி என்பதைக் காட்டிலும்
இசையெனச் சொல்லிவிடுவது
ஆகச்சிறந்தது.


நன்றி உயிரோசை..

Friday, July 30, 2010

அரேபிய ராசாக்கள் - பிரிவு அறிவித்தல்..




நிசப்தத்தின் நிசப்தம்..!

அன்று நான் வழியனுப்பப் பட்டேன்.. அதனை, டாட்டா காட்டி அனுப்பினார்கள் என்றுகூட பிள்ளைத் தமிழில் சொல்லலாம்.. உயர உயர பறக்கப் பறக்க.. என்னை, என் இயல்வாழ்வைத் தாழ்த்திக் கொண்டிருந்தது விமானம்.. இதுதான் ஒரு ஆழ்ந்த நம்பும்படியான பொய் என்பேன் பிற்பொழுதில் அரேபியக்கதை கேட்கும் பாரபட்சமற்ற யாவரிடமும்..


ஆகும் நொடியில், வெயில் அடித்து மழை ஓய்ந்த மனநிலையில், இப்பெரும் அரேபியாவின் கொடுமணல் குன்றின் மீது ஒருநாளைக் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் கடத்திக் கொண்டிருக்கிறேன்..


பணியெடுக்கும் ஒட்டகப் பாலையில், என்றோ அன்று வெறுமையின் அர்த்தம் தாங்காது, கொதி வெயிலில் நனைந்த பைப்பின் மீது வெல்டிங் ராட் உபயோகப்படுத்தி கிறுக்கிய என் பெயருடன் கூடிய நண்பர்கள் இனிசியலை.. கண்டு கொண்டிருக்கும் வானத்தை தீர்க்குமுன், ஒரே ஒருமுறை கண் ஒத்தியெடுக்கவல்லாத ஆசையோடு ஞாபகங்கள் மருகுகிறது கசக்கிப் பிசைந்து இதயக் கூட்டினை..


எழுதுவதை நிறுத்திவிட்டுப் பார்க்கிறேன்.. உயிர் உருக உருக உருகுவதை..!


யானைப்பாகன் பழக்கி வைத்திருக்கும் ஒரு யானையைப் போன்று சொன்னதைச் செய்யும் மனமாக இருந்த மனசு, சொல்லச் சொல்லக் கேட்காது அடம்பிடிக்கும் மழலைப் பிள்ளையாக.. என் செய்வேன் என்னை ??


மொழிப் பெயர்த்தலும் மௌனச் சொல்லாக உருப்பெயர்வதை, எந்தப் பூட்டுக் கொண்டும் அடைக்க துணிவற்று.. செத்து செத்துப் பயில்கிறது இதுவன்றோ என்னை நான் இருத்திக் கொண்ட இருத்தலென..!


மிகுப் பேரமைதியாக சொல்லப்போனால், தாயை விட்டுப் பிரிந்த வளர்பறவைக்கு உயிர்வாழ எது தேவையென சுலபத்தில் பிரித்தறியாத் தருணம் போல அவிழ்க்கிறேன் என்னை என்னிலிருந்து..!


கடந்துபோன நானூற்று எழுபத்தைந்து நாட்களில் இல்லாத வெறுமை அறையெங்கும்.. இம்மண்ணை விட்டு நகர்ந்தாலும் ஒரு போதும் தீரா வாசமாகத்தான் இருக்கப் போகிறது அரேபிய ஞாபகங்கள் மனசின் அழியாப் பாகங்களில்.. நிஜம் இதுவோ அல்லது வெறும் பிரம்மையோ! என்னை நானே கேட்டுக் கொள்ளத் தவிக்கிறேன்.. பிறகு தவிர்க்கிறேன்.. இந்த நிசப்தத்தின் நிசப்தம் அலுவலகத்தின் கடைசிக் கணக்கு முடித்தலின் பேரமைதியைக் காட்டிலும் அதிக வலியோடு அமிழ்கிறது..

கொப்பளித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு கேள்வி உயிர்ப்பெறுகிறது.. நான் மட்டும்தான் பைத்தியக்காரனா இல்லை என்னை மட்டும்தான் இப்பைத்தியம் பிடித்து ஆட்டுகிறதா?? சமயங்களில், சிறு குழந்தைகள் அம்மாவின் தீட்டுப்பற்றி தெரிந்துகொள்ள விருப்பப் படுவதைப் போலொரு சூழலோ யென்று.. கேள்விக்கு கேள்வி கொண்டே பதிலும் சொல்லப் பிரியப் படுபவனாகிறேன்..!


ஒரு முழுநாளின் நொடிகள் மிதம் மிஞ்சித் தீரும் பொழுதுதனில் தாள தாளப் பறக்கும் விமானத்தில் நான் உயர உயர பறப்பேனோ..? நம்பிக்கையின் கீற்று நட்சத்திரங்களைவிட பிரகாசமாக.. அது போதும் அது மட்டுமே போதுமெனக்கு.. கூச்சமென்ன வேண்டிக் கிடக்கு கூச்சம்.. எழுது, இன்னும் எழுது எழுதென்று பின்தொடரும் நிழலின் ஒலி சன்னமாகக் கேட்பதை உணர முடிகிறது..


முன்பு இதே மாதிரியான, என்னைப் போன்றே.. விலாசம் இடாது கடிதம் எழுதி, எழுதிக் கிழித்திருக்கிராறாம் அவர்.. அப்படி என்னப் பெரிதாக முடித்திருக்கிறேன் , வெறும்..வெறும்.. நானூற்று எழுபத்தைந்தே நாட்கள் , அதுவும் திருமணம் முடிக்காத இளைஞன்.. எதிர் அறை நண்பருக்கோ என்னைப் போலொரு மகன், என் தங்கையைப் போலொரு மகள்.. என்னைப் போன்றே விலாசம் இடாது கடிதம் எழுதி பல நான்கு முறை எழுதிக் கிழித்தாராம்.. எரிசாராயத்தின் உச்ச போதையிலும் பகிர்ந்து கொண்டே படுக்கப் போனார்..நான் என்ன அப்படிப் பெரிதாக...


உலகம் பெரிது .. காலம் வலியது.. சிறியோன் நான்..இன்னும் எத்தனையோ வாழ வேண்டும்...
கடல் தாண்டி, கடலைக் காட்டிலும் பேரன்பு சூழ்ந்த இருப்பினையே எனக்கு வழித்திருக்கிறீர்கள் உங்களில் யாவரும்.. கடவுள் என்றுமே எனக்காகப் பிரார்த்திப்பார்..!


முழுநாள் நிர்வாணமாய் யொதுங்கிய அறைக் கதவினை டம் டம்மெனத் தட்டுகிறார்கள்.. விமானம் தாள தாளப் பறக்கும்... நான் ஓங்கி ஓங்கி விரிவேன்..


அன்பின் இனியது
அன்பன்றி வேறேதும் உண்டோ.!


ஹாய் அம்மா
ஹாய் அப்பா
ஹாய் தங்கச்சி
ஹாய்டா டேய் உங்க ஆளு சௌக்கியமா ? லெட்டர் கொடுத்துட்டியா.. இல்ல இன்னும் அதே...??


( அவனது 2010 டைரிக் குறிப்பிலிருந்து.. )



Monday, July 26, 2010

வன்புணர்ச்சிக்கு உத்தேசம்..

ஆசிரியர் மனுஷ்ய புத்திரனுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்..  நூறாவது இதழாக இவ்வார உயிரோசை..!





ஆயாசமாய் பகலை அள்ளிவிழுங்குமாறுயிருந்த சூரியன்

குறிப்பிட்டதொரு குறிப்புணர்த்துவதாக சிலாகித்து, 

பின்அதில் தொடர.. எதன்பொருட்டோ லயிப்பற்று, 

காற்றசைக்கும் மரஇலையின் திசையில்
வெகுதொலை பறப்பதாயொரு முடிவுக்குவந்து..

பின்தொடர் பறவையொன்றின் இறகில்

இரவைக் கொண்டுவரும் நிலவின் நுனிமூக்கில்
கிட்டாதிருந்த கவிதைக்கான
வார்த்தைகளேதும் சொட்டிவிடாதா..

யென்றவொரு கொதியோடு

மனம்புரளும் கொள்ளாத இருப்பில்,

மனங்கொத்திமீனாக வந்துவிடுகிறது
புட்டிவரை கூந்தலுடைய அப்பிசாசின்

உயிர் உறிஞ்சும் கண்கள் !!


நன்றி உயிரோசை..

Saturday, July 24, 2010

அலமாரிப் பக்கங்கள்..



கடைசி உரையாடலின் மௌனங்கள்
பழையடைரியை வாசித்துக்கொண்டிருக்கிறது..
யாதொரு முன்முடிவகளுமற்று..

சமயங்களில்
மறுசந்திப்பிற்கான உத்தியெனவும்
ஓர் உறவு மருகுகிறது
மௌனங்களின் கூர்ப்பக்கங்களில்..

ஒரு தேநீர் மாலையும்
இரு காலி இருக்கைகளும்
நமக்கான முடிவில்,
முந்தைய நமது பிரிவுநாட்களை
யொத்த அதே ஈடுபாட்டின்
நகம் கடித்தலோடு.!

Thursday, July 22, 2010

அரேபிய ராசாக்கள் 12..



கூழாங்கற்கள் தடாகத்தில்
பிறிதொரு கால்களை யோசித்ததாக
குனிந்து முள்ளெடுத்து அதையோரமாய்
விட்டுச்செல்கின்றதொரு கை!

தொலை பயணங்களுக்கு..
காரணங்களென்னவாக யிருக்கமென்ற
யாசிப்பிலொரு கை
எதையோ விட்டுச்செல்வதாய்
நீள்கிறது இலக்கின்றி என் கணம் !

ஒருவன் வண்ணம் தெளிக்கின்றான்,
இன்னுமொருவன் அதை பற்றிக்கொள்கின்றான்,
இப்படியாகத்தான் சுழற்சியில் வாழ்வு..!


நன்றி வார்ப்பு..

Monday, July 19, 2010

பட்டாம்பூச்சியின் சிறகு உதிர்க்கும் வர்ணநிழல்..



புழுக்கள் ஊரும் சதையென
நெளியத் துவங்கும் இரவின் முகமெங்கும்
ஒரு பைத்தியக்காரப் பட்டாம்பூச்சியினைப் போல
பறக்கத் துவங்கிய அந்த மாயநொடியில்
தனிமை உண்பவன் எழுதப்படுகிறான்
புனைவைப் புசித்து ..

புரிதலின் செய்கைகள்
விழுந்து நொறுங்கிய பீங்கான் சீசாவாகி
தின்னத் தருகிறது மனமீன்களை
படுக்கை அறையில் விழுந்து கிடக்கும்
அடர்மௌன நிழலுக்கு.. 

ஒரு tumbler கடலும்

உள்ளங்கை size நிலவுத்துண்டும்

இதழ் விரியத்துடிக்கும் roseபூவும் 
உங்களுக்கென உமிழத் துவங்குகிறதது
மனமீன்களைக் கொத்தி தின்ற நிழல்!
      
உங்களில் யாவரும் பருகி
அன்பைக் கொண்டாடுங்கள்.. 
அன்பின் கட்டடங்கா போதையில் மிளிருங்கள்..

என் தனிமை எனக்குப்
போதுமானது. 


நன்றி உயிரோசை..

Saturday, July 17, 2010

முன்முடிவுகளைக் கைப்பையில் ஒளித்துவைத்திருத்தல் உகந்ததல்ல...




மனதை திடப்படுத்திக் கொண்டு
நகரத் துவங்கியது மழை.
தவளைகள் பரிகாசிக்க ,
நட்சத்திரங்களென
வாய்நிறைய அள்ளிவந்தது வானம்
அது விதண்டாவாதங்களின்
வெற்றுக்கூடுகளென அறியாது..!

மழை நகர்ந்து
வெகுதொலை கடந்தும்
தவளைகளும், வானமும்
பார்வை பரிசோதிப்பற்று
முட்டியவாறேப் பிய்த்துக் கொண்டிருந்தன
சாக்கடைக் கதவினை
மழையென உருவகித்து..

பின்னொரு பொழுதில்
மழைபெய்யத் துவங்கியது
மழையாகவே..!
தவளைகள்
யாதொரு அறிவிப்புமின்றி
காணாது போயிருந்தன...

Wednesday, July 14, 2010

யாதுமாகி...



ஒரு காதலை
கவிதையிலெழுத வேண்டுமென்ற
அவனுக்கு
இடையூறாகயிருந்தது
ஒரு நட்பு!

ஒரு நட்பை
வாசித்துக்காட்ட வேண்டுமென்ற
அவளுக்கு
இடையூறாக இருந்தது
ஒரு காதல்!


நன்றி கீற்று..

Monday, July 12, 2010

எழுத வாய்க்காத இரவொன்றில்..



சலனமற்றுக் கிடந்த தலையணையில்
சட்டென வந்திறங்கியது
எனக்கு மிகப்பிடித்த
ஒரு ரயில் பெட்டியும்
ஒரு மழை வண்டியும்..

கனவுகள் காண வலுவற்றிருந்த
எனது இரவுகள்
இக்கடைசி வானத்தைக்
கொண்டாடத்துவங்கியது,
தனிமைநாற்றம்

கடலில் விழுந்த நட்சத்திரங்களின் வாசமென

மாறிப்போனது..

ஒரு மிகுஆசுவாசம்
நான் ஒற்றையான அறையெங்கும்
மெல்லப் படர்ந்து
என்னைக் கட்டிக்கொண்டது..

இனி ,
ஒரு குழந்தையின் மென்சிரிப்பாக
ஒரு பதின்வயதுப் பெண்ணின் முதலுதிர சந்தோசமாக
முதல் குழந்தைக்குத் தாயான ஒரு பெண்ணின் முகமாக
தனதான பெண்ணின் மிகுஅன்பில் ஒரு ஆணின் வெட்கமாக
தைரியமாய்
சப்தமாய்
யாவரிடமும் தெரியப்படுத்தப்படும்..

எனது டைரி நிரம்புகிறது..

யாரும் என்னைத் தடுக்கப்போவதில்லை 
அறை எண் 7ல் நான் மட்டுமே

தற்கொலைக் குறிப்பெழுதுகிறேன்.!



நன்றி உயிரோசை..

Monday, July 5, 2010

கடந்து செல்லுதல்.


பால்யத்தைக் கடக்க எத்தனிக்கும்
பதின்வயதின் சட்டைப்பையெங்கும்
வண்ணத்துப்பூச்சிகளின் கூடாரம்..

சில சிறகு உதிர்ந்தவைகளாகவும்
சில உதிர உதிரப் பறப்பவைகளெனவும்..

ஒரு முழுவதுமான கையறுநிலையில்
பிரியத்தின் நிழல்கள்
செத்து செத்துக் கிடக்கின்றன
பொழிதலின் மழைச்சாலையெங்கும்..

இன்னும் மின்னிக் கொண்டுதானிருக்கின்றன
வானெங்கும் நட்சத்திரங்கள்
ரசிக்கத்தான் என்னிடம் நானில்லை.!

அரிதாகப்பூக்கும் ஒரு காட்டுப்பூவினைப் போலவோ
எறும்பு மிதக்கும் ஆற்றின் இலைபோலவோ
ஒரு சில சமயங்களில்
கடந்து கொண்டுதானிருக்கிறது
என்னை இந்த வாழ்வு.

நன்றி உயிரோசை..



 
வலைச்சரத்தில் எனது  எதற்கேனும்  ஐ! அறிமுகப் படுத்தியிருக்கிறார் மாமா பா.ரா..  நன்றியும், மகிழ்வும் மாமா :-)







Saturday, July 3, 2010

பரிச்சயமற்ற புனைவு.




இன்னும் எத்தனை நட்சத்திரவானுக்குப்
பின், அவளது சேகரித்த முத்தங்கள் மீளுமோ.

ஓராயாச எதிர்நோக்கலில்
குருவாளின் சொச்ச குருதியும்
கனவறை பருக,
கடல் குடிக்கும் உப்பாயுறைகிறது மீன். 

உடைந்த நிலா
ஆசைபௌர்ணமிக்கென வளர்வதாய்
மிகுலெகுவாய் விரல்நீட்டும் வானத்தில்
நிஜ நிழல்கள் இதுவரை எங்குமில்லை
யென்பது எத்தனை பேருக்குத் தெரியவருமோ.

வயதினை வயதே குடித்தலென்பது
நீர்தேங்கி யழுகிய வேரிலொட்டிய
மண் எனலாம், சற்று குரலைக் குறைத்து. 

அர்த்தமற்றதனிமைக்கு இளமை இரையாகிறது 
மரமில்லா ஒடிந்த கிளையென.

இரவோடு இரவாக
புகைமாண்ட அழுக்கு அறையில்
துவம்சமாகிறதொரு ஒற்றைக் காமமும்
உயிர் உருகும் காதலும் .





Wednesday, June 30, 2010

முன்பறியாதிருந்தது...



ஒரு உண்மை தேவைப்பட்டது
காதல் பரிச்சயப்பட்டது .

ஒரு காதல் தேவைப்பட்டது
மூன்று முறை
நட்பு தோல்வியில் கனிந்தது .

ஒரு நட்பு தேவைப்பட்டது
நான்காவது முறையாக
காதல் சொல்லப்படுகிறது .

எல்லாவற்றையும்
லெகுவாய் கடந்துவிட
ஒரு பொய் தேவைப்பட்டது, 
ஒரு நரகம்
சிரத்தை ஏதுமின்றி
கவனிக்க மறுதலித்தது .

வளர்ப்பு நாய் இறந்துவிட்டது
தெருநாயைப் பற்றி கவலைப்பட
யென்ன அவசியம்.. 


உங்களைப்போல நானென்பதில்
எந்தவிதமான இடையூருமில்லை எனக்கு
என்னைப்போல் நீங்கள் எனலாமெனில்
யோசிக்க வேண்டிவரும்.

Friday, June 25, 2010

தீரவாய்க்காத இருப்பு.!


கிடைத்துவிடாத வண்ணத்துப் பூச்சியின்
ஸ்பரிசத்தை அழுதலில் மீட்டுகிறது
அக்குழந்தையின் தனிமை ,
என்பதாய் இன்னும் நிறம்வாய்க்காத
ஒரு கவிதையைப் போல்
கழிந்து கசிகிறது
பிரிவதாய் முடிவெடுத்தப்
பிரிவின் வாசனை.!

Wednesday, June 23, 2010

காதல் ஆதலால்..


உனது வருகைக்குரிய
அன்பின் தடங்கள்..
ஒரு காத்திருப்பின்
பரிச்சயத்தை ஆயாசமாய்
அள்ளி முகர்கிறது,
ஒரு தாயின் மாரில்
குழந்தைகள் மருகுவதென .

ஒரு காத்திருப்புக்குப்
பின்னுள்ள மௌனங்களை
எப்படி மௌனமாக்குவதென்ற
கேவல்களில்தான்
அமிழ்ந்துவிடுகிறது
இன்னும் காதல்
காதலாகவே .

ஒரு காதல்கவிதை
எத்தனை எளிதோ
அத்தனை எளிதே அல்ல
ஒரு காதல் சொல்லப்படுவதென்பது .

Monday, June 21, 2010

மழைதூவும் நெடுஞ்சாலை வண்ணத்துப்பூச்சிகள்...



கரும்பூச்சையின்
பச்சைக் கண்களிலிருந்து
தீட்டப்பட்டிருந்தது
ஒரு மரண வெம்மை..

இசைந்து கொடுக்க வல்லாது
மேஜையை
வெறித்த வண்ணம்
கரைந்தபடியாக இருந்தது
ஒரு தேநீரின் ஒப்புமை..

முன்னும் பின்னும்
அலைந்துக் கொண்டிருந்தவள்
தடக்கென எதையோ சொல்லியவாறே
நகர்ந்து விட்டிருந்தாள்..

நிலா விழு கடலென
பூப்பறிக்கத் துவங்கி
நெடுஞ்சாலை வண்ணத்துப் பூச்சிகளாய்
வர்ணம் ஒட்டிக்கொள்கிறதொரு மனசு !!


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3043 

நன்றி யிர்மை.

Thursday, June 17, 2010

மழலைகள்வான் ஒதுங்கிய மீன்கடல்...



பலூன் விற்பவன்
காட்டில்
மழை பெய்வதில்லை
முன் போல். !

அவர்களின்
ஆறுமணி வீடு திரும்பலுக்குள்
ஏழுமுறை மண்டை உடைந்து
செத்துப்போகிறான்
துப்பாக்கிச் சுடுபவன்.
அம்மா அப்பா சண்டை
வீடியோ கேம்ஸ் 
கொலைகளைக் காட்டிலும் எரிச்சல்.!


காகித கப்பல்கள்
அம்மாக்களைத் தேடி
நீர்த்துப்போகிறது,
மழலையின் ஆசைகள்
மழலைகளுக்கான ஆசைகளாக
இல்லை.! 

Tuesday, June 15, 2010

மெல்லமாயொழுகும் பால்யம்...



எறும்பு நகர்ந்திருந்த
வெயில் தரை வழி
மெல்ல ஊர்ந்த
ஏழு வயது பொடியனின்
விரல்களை
அகிம்சை எனவோ
வன்முறையெனவோ
சொல்லி முடிப்பதற்குள்
கனாவொழுகிய இரவொன்றில்
நன்றாக உறங்கி இருந்தது, 
எனது அகாலம்
மற்றும்
முந்தைய எனது விடியல்..! 


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3032 

நன்றி யிர்மை.

Sunday, June 13, 2010

உயிரெழுத்து



ஒரு முத்தம் மருக
மருக உருண்டோடுகிறது வெட்கநட்சத்திரங்கள்..
ஒரு புணர்வின் இறுதி இரவை
உருகி வழியும் மெழுகின் கதகதப்பில்
வர்ணம் பூசிக் கொள்கிறது குளிர்நிலவு..
ஒரு நான்
ஒரு நீ
ஒரு நாம்
ஒரு அரவணைப்பு.

Monday, June 7, 2010

அரேபிய ராசாக்கள் 11..

தொடர்ந்த பத்தாவது வாரமாக எனது கவிதை உயிரோசை இணைய இதழில்..
ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..







பாலைகளின் வர்ணமாய்
ரீங்கரிக்கும் ஒட்டகங்களில்
நிரம்பித் துள்ளும் தண்ணீராய்
மெல்ல மெல்ல
அண்ணாந்து கசிகின்றன
எழுத முயன்றதின் ரகசியம்.

என்னொரு சாமவனத்தில்
காட்டெருமையின் மூர்க்கத்தோடு
புணர்ந்தவர்களின் முகவரியைக்
கூச்சம்கடாசிக்
குறித்துக் கொள்ளுங்கள் நீங்கள்
எதற்கும் அவசியம் வரலாம்.

எனதிந்த விடியற்காலை வானில்
குழுமியிருந்த
சிறுவர்கள் என்னையும் சிறுவனாக்கிச்
செல்கிறார்கள் ,
ஆர்வமிருப்பின் நீங்கள்
ஒரு கவிதை புனையுங்கள்
எதற்கேனும் அவசியமாகலாம்.

நட்சத்திரங்கள்உதிர் கடலில்
நிலவைத்தூக்கி வரும் தனிமை
முகர்ந்து பருகுங்கள் நீங்கள்
இக்கணம் தொடர்ந்தே...

ஒட்டகங்களுக்கு விடுமுறை செய்தி
ஆனந்தக்கூத்து !


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=3005


நன்றி உயிர்மை.

Tuesday, June 1, 2010

மன்னிக்க!



கண்ணீர்த்துளிகளின் மிச்சத்தில்
எரிவது என்னவோ
ஒரு நட்பின் ஈரமும்
ஒரு காதலின் எச்சமும்..

காது கேட்பவர்களில்,
சில காதுகள்
துப்பும் எச்சிலும்
திமிரும் புன்னகையும்
அசாதரண ஆறுதலும்,
நொடியின் பின்நொடியிலும்...
இமைகள் ஊமைப் பொழுதென
உயிர் தேடித் திரிவதாய்
தொடர்ந்து விக்குகிறது
கையூண்டு இதயம்..!

கவிதை யெழுதுவது என்னவோ
சிலருக்கு மட்டுமே
வாய்த்து விடுகிறதெனினும்
தலைப்பில் சிரமமேதுமில்லை
நடைபயில்பவர்களுக்கு!

அவள் எப்பொழுதுமே அவள் ,
எனக்குப் பந்து விளையாடுதல் பிடிக்கும்
நிறைவு!


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2979

நன்றி யிர்மை.

Friday, May 28, 2010

மரணம் பழகும் விரல்கள்..



முதலாவதாய்
துவங்கிய கவிதை
அவள்!

வார்த்தைக் கோர்ப்புகள்
மட்டும்
கடைசியானபாடில்லை!

ஒரு குறிப்பிட்ட
மௌனத்தை
மௌனம் என்று
சாதாரணமாகச்
சொல்லிவிடுவதற்கு
தயக்கம் தடுத்துவிடுகிறது!

மழலைகளை
ரயில் தண்டவாளங்களைப்
போல கடந்துவிட முடிவதில்லை,
சேர்த்துக் கொள்ளலாம்
இனி அவளையும்
காதலையும்
அதனோடு!

http://youthful.vikatan.com/youth/Nyouth/arumugampoem240510.asp

நன்றி விகடன்.

Monday, May 24, 2010

மரணித்துவிடாத தற்கொலைகள் !



பறவையின் நிழலில்
கரையொதுங்கிய வானம்
அவள் !

நிலவுப் பெருங்கடலின்
எதிரொளி வெளி
நான் !

மயானச் சதுக்கத்தில்
மனிதனெரியும் விறகு
காதல் !

விண்மீன் இதய ஓவியமும்
சூரியமுகப் பென்சிலும்
இடர்ப்பாடுகளில்
புனையாக்கடிதம்
அல்லது காகிதம்
கவிதை !


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2953

நன்றி யிர்மை. 

Saturday, May 22, 2010

காதல் மழை



ஈர முத்ததினொரு துளி
மழையெனக் கசிய
பேசும் மௌனம்
பேசிக்கொண்டேயிருக்கிறது
மௌனங்களாகவே !

ஒரு காகிதத்தை
நிர்வாணப்படுத்திய
பெருமூச்சில்
உருகி வழிகிறது
என் காதல்
கவிதை வார்த்தைகள்
ஏதுமின்றி!

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8830:2010-05-21-16-22-58&catid=2:poems&Itemid=265


நன்றி கீற்று.. 

Monday, May 17, 2010

நேசிக்கும் பெண்ணை ஆகாயத்திலிருந்து தூவுதல்..!



நிசப்தத்தின்
பெருவெளி யெங்கும் வெம்மை...

ஒரு மரணம் தான்
கவிதைக்குக் காரணியாகத்
திணிக்கப்படுகிறதென்றால்
காதலை வெறுக்கத் துணிவதென்பது
இயல்பு மீறலல்ல! 

மாற்றம் வரம்பு மீறி
அடுத்து இன்னொரு
கவிதையில்
உன்னை மழையெனலாம்
மறக்காமல் பெய்துவிடு!

நேசிக்கும் பெண்ணை ஆகாயத்திலிருந்து தூவுதலென, 
மறந்தும்
எங்கும் எழுதாது
காற்றில் மடித்து
காகிதத்தின் கதவைச்
சாத்திவிடப் போகிறேன்.

நாளை உன் மழலை
விளையாட.. கப்பல்
தேவைப்படும்.! 


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2933

நன்றியிர்மை. 

Tuesday, May 11, 2010

...................



தழுவல்..
வியர்த்தல்..
வியத்தல்..
முறைப்படி..

மற்றபடி.. 
மறைத்தல்..
கலைத்தல்..

விருப்பம்..அல்லது..நிர்பந்தம்..!

யதார்த்ததை உள்ளங்கையில் சொருகிவிடுதலென..



இத்தோடு..
முடியப்பெற்று விடுமெனதான்,
தகித்துக் கொண்டிருந்தது...
மௌன பீடம்.

சந்திப்புகளின் வாசமும்..
சிநேக கைகுட்டையும்,
எப்பொழுதுமே...
ஒரு நெருடலாகவே
அமிழ்ந்து விடுகிறது
எல்லோருக்குமான இதயத்தில்.

கனங்களும்..
கணங்களும்..
ஒருசேர நிர்ப்பந்தித்து வைத்திருக்கும்
மௌனபீடம் என்பது ..
அத்தனை சுலபத்தில்
உடைபடுவதானதாக அல்ல.

புரிதலும்..
புரிபடுதலும்,
எளிதேயெனும்
கோர்வையாயிருந்தால்..
அவள் உள்ளங்கையில்
சிவப்புபட்டிருக்கும்
அம்மருதாணி சிவப்பைப் போல
எவ்வளவு அழகானதாக
துளிர்ப்புறும்
இந்த வாழ்வென்பது.


http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2893

நன்றி யிர்மை.

Monday, May 10, 2010

...................



நிகழ்ந்து முடிந்தது மரணம்.. 
நட்சத்திரங்களில்லா வானம்
அழுக்கு!

எவருக்கும் புரிவதில்லை
அவளுக்கு மட்டும் புரிவதேயில்லை.. 

Tuesday, May 4, 2010

பனிக்காடு.



நிலவறையில்
கடலுறங்குவதாக
எழுதிச்செல்லும்போது
கவிதையொன்றின்
சுவாசம் முட்டுகிறது !

இரண்டாம் பத்தி
இப்படிப்பிரிபடுகிறது
குளக்கரையில்
நிலவு துயிலுறுமாம் !

ஜீவநடமாட்டமேதுமில்லா
விழிகளிரண்டின்
மேற்பாகமுள்ள நெற்றிப்பொட்டில்
மாறி மாறி மீள்கிறது
மேகக்கூட்டம் !

மெல்லப் பனிவிலக்கி
அதிகாலைச்சூரியன்
ஆளெழுப்பும் பணியினை
நித்தமும் செவ்வனே செய்வதாகி
நிர்ப்பந்திக்கிறான் கடவுள் !

சாத்தானைச் சந்திக்கப்
புறப்படுகிறேன்!
யாரங்கே..?
திறவ கோலுங்கள்.. 
அவசரமாக வழி தேவைப்படுகிறதெனக்கு...

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2864

நன்றி யிர்மை.

Monday, May 3, 2010

எழுத்தின் வன்மம் .




வாசித்திருந்த
புத்தகத்தை
சாத்திவிட்டு
சலனமின்றி தொடர்ந்தது
அதன் ஞாபகங்களில்
மனப் பக்கங்கள்.
 
ஒரு கட்டத்தில்
நான் தொலைந்த
அதே நிமிடத்தை தொட்டுவிட
நடப்பு நிமிடத்தில்
தொலைபட்டேன்.

ஒரு முறைக்கு
ஒவ்வொரு முறையும்
தாக்கிவிடுகிறான்
எழுத்துக்காரன்.


http://www.thinnai.com/?module=displaystory&story_id=31005022&format=html

நன்றி திண்ணை..

Sunday, May 2, 2010

...................



குறிப்பிட்ட..
இடமொன்றில்,
தீர்மானப்படுகிறது!
அவள் தீட்டாத ஓவியம்
மௌனமென்ற வரைபடத்துடன்.!

ரசிக்கும் காற்று
சிந்திச் செல்கிறது
இசையெனும் புள்ளியினை.!

தூர நின்று
கிளியின் வண்ணமொத்த
இலையின் பனித்துளி
வெட்கத்தை எழுதிச் செல்லும் பொருட்டு..

இக்கவிதை முடித்து வைக்கின்றது
முதல் முத்த ஞாபகத்தினை.!

Friday, April 30, 2010

இம்முறை கண்டிப்பாய் சொல்லப்பட்டிருக்கும் காதல்!



சொல்லியே ஆக வேண்டும்!
எப்படி என்பதுதான்
இன்னும் பழகிவிட முடிவதில்லை..

இப்படித்தான்
என்றால்..
அப்படியில்லையே
அப்படி வேண்டாமே
அடிக்கடிச் சொல்லிக்கொள்கிறேன்
எனக்கு நானே!

எத்தனை முறை
ப்ராக்டீஸ் எடுத்துச் சென்றாலும்
ஒரு முறையும் சொல்லிவிடுவதாயில்லை!

அதே மாதிரியானதொரு
சொல்லாதச் சொல்லோடுதான்
நடை கொண்டிருக்கிறேன்
இம்முறையும்!


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=7420:2010-04-30-03-56-19&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று.. 

Tuesday, April 27, 2010

நேசங்களின் கூவல்..



பயணங்களில்,
பின்னிருக்கைகளின்..
தடம்பதிந்த வெற்றிலைச்சிவப்பில்
அடையாளப்படுத்தப்படும்
அவர்கள் முதியவர்களென..

வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகள் வளர்க்கும்
மழலைகளின் வயது கண்டு
தேடல்கள் தற்காலிகப்படநேரும்.

ஓரர்த்த ராத்திரியில்,
யர யரப் பறக்கும்..
எல்லோரையும் போல
எனக்கும் கனவுகள்..

நட்சத்திரங்களை வாசிப்பவர்கள்
இப்-போதைக்குக் குறைவென்றே
இருத்தல் கூடும்.

அவள் வராத வருகையை
சில பொழுதுகளில்
மழையுரைத்து நகர தீரும்!

நேசங்கள்..
நெய்திருந்த கவிதைகள்
நிரம்பி இசையும் காற்று வீசியதும்
முடிவுற்றிருக்கும் ஒரு மரணம்.!


http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2833


நன்றி யிர்மை.

Sunday, April 25, 2010

குறிப்பின் தொடர்ச்சி..


கடைசி உரையாடலென கரைக்கப்பட்டிருந்தது ,
தேநீர் தீர்ந்தபின்னான கைக்குட்டையின் நுனியில்
ஒரு காதலும்
ஒரு நட்பும்
இரு மௌனமும்..!
அம்மேஜையின் விளிம்பில் இன்னும்
கேவிக்கொண்டிருக்கிறது கண்ணீர்துளியொன்று
கைகோர்க்க ஆளின்றி..


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=6895:2010-04-25-05-32-16&catid=2:poems&Itemid=265

நன்றி கீற்று..

Thursday, April 22, 2010

...................



அன்பின் ஆதாரங்களைத் திரட்டுதலில்,
கவனக் குறைவின் முரட்டுத்தனத்தில்..
பிய்ந்த எறும்பொன்றின் தலை, 
மிகத்தெளிவாய்..

...................



ஜன்னல்கள் திறக்கப்படுகிறது..
முன்னமே மழை தூறுகிறது..
அவள் வருவாளா !!

ஜன்னல்கள் அடைத்துக்கொள்ளப்படுகிறது..
மழை நின்றுவிட்டது..
வந்தவள் அவள் இல்லை !!