Sunday, March 4, 2012

ஓசையில்லா இசை!







மரணத்தின் பயம் மிக எளிமையாக
விடை பெற்றுச் செல்கிறது
உனது குருஞ்சிரிப்பின்
உனது கடைசித் துளி மௌனத்தின்
அர்த்தங்கள் குமிழ்ந்த
இலக்கற்றப் பற்றுதலில்.


பதிமூன்றாவது மாடியிலிருந்து இன்னும் யாரும் குதிக்கவில்லை!








தற்கொலைக்கு முந்தைய இரவில்
இயலாமையின் உச்சத்தில் நின்று
பதில் தெரியாத கேள்விகளுக்கு
ஒரு அழகான இளம் பெண்ணை
மெல்ல மெல்ல நிர்வாணப்படுத்துவதாய்
திசை அறுத்துக் கொண்டேன்.

இனி









அகாலத்தின் நிசப்த தெருவில்
உடலுதிர்ந்த இறகென தனித்தலைகிறேன்  

பிரிவின் துயர்
நிலா விழுங்கும் பௌர்ணமி கடலென
அதி பிரகாசமாய்.

என்னுள் உடைந்து-அழுகும்  
ஞாபகக் கீறல்களை
மாம்ச விருப்புடன் 
அலகு முட்டிச் செல்ல
தாழப் பறந்து கொண்டிருக்கிறது 
பிணந்தின்னிக் கழுகொன்று.

ரயில் பாலம் அருகே
இனி நீ வரத் தேவையில்லை
பயந்து பயந்தவாறே!  




காதலாதல்








மழைநீர்க் கோடுகளெனப் பதிந்திருக்கும்
உனது விரல் ரேகைகள்,


அழகழகான வண்ணங்கள் நிறைந்த
வரைபட வீட்டின் தனிமை போல்

அல்லது


தரப்படாத யாசகக் காசின் கணம் ஒத்த
ஏழ்மைக் குழந்தையின் தத்தளிக்கும் இதயம் போல்


என அறிந்த நிமிடத்தில்
யாதொரு யோசனையுமற்று
உனது கரங்களைப் பற்றிச் செல்கிறேன்
நம் காதல் இதுவரை கண்டிராத
ஓர் மர்மக் குகையின் அற்றத்திற்கு.

நன்றி உயிரோசை


Friday, March 2, 2012

ஒற்றைப் புறந்தள்ளலில் உலகை ஒடித்தல்

தெய்வத்தின்  சன்னமான குரலில்
சீழ் வடிந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில்
நீ எதை நிரூபிக்க இத்தனைப் 
பிரயாசையோடு எத்தனிக்கிறாய் 

மனம் ஒரு பெருங்கிடங்கி 
உனது அனுமானங்களையெல்லாம்
அதனில் இட்டு வை 

மதுவைக் குடித்து 
பெண்ணைத் தின்று 
அடுத்த கணத்திற்கு குரூரமாய் முன்னேறு 

பனிக்குடம் உடைந்து அலறும் மகப்பேறு
 பெண்ணின் அவ்வொலியை
 இசைக் குறிப்பெனக் குறிப்பெடு

அவர்கள் இப்படித் தான் 
 யாரையும் எதற்கெனினும் எப்பொழுதும்
 குற்றம் கூறிக் கொண்டுதானிருப்பார்கள்   

நீ உன் குற்றத்தை 
முலைக்கழும் கைப்பிள்ளையின்
தசை திருகி வெடிச்சிரிப்போடு கடந்து செல்

நீ எத்தனை முறை எப்படிக் கூவினாலும் 
மனம் பிறழ்ந்தவனென உன்னை 
யாரும் அடையாளப்படுத்தமாட்டார்கள்

ஒவ்வொருவரும் தங்கள் முக மூடியை 
தெய்வத்தின் சீழ் வடியும் குரலிலிருந்து 
அவ்வளவு தத்ரூபமாய் செய்து வைத்திருக்கிறார்கள் 

ஒரு நிசப்தமான இரவில் 
 முட்டக் குடித்துவிட்டுநீயே
தற்கொலை செய்துகொள் உன்னை.


நன்றி உயிரோசை 




Sunday, February 19, 2012

நீ அறிவாயோ?



துளி விசமென நனைக்கிறது
உன் மௌனம் உடைத்த சொற்கள்
என் காதலின் கண்ணாடியை 


பிராயத்தின் நகலென வெறுமென நகர்ந்து
அதனை மறப்பதில்
மிகுந்த தயக்கம்


எனக்கும்
பெருங்கடல் தகர்ந்த இச்சிறு கணத்திற்கும்.  


நன்றி உயிரோசை..  

முத்தத்திற்குப் பின்பும் முத்தம்







ஆகாசம் உடைந்து வீழும்
இவ் அகாலத்தில்
நீ உடை மாற்றுகிறாய்

அன்யோன்யத்தின் அசதியில்
எனக்கிந்த அம்மணமே போதும்
இப்பேரிரவைப் பருக

விரல்களுக்குள் மூழ்கும் விரல்களிடமிருந்து
காமத்திற்கு கற்றுத் தருவோம்
காதலின் வெயிலை
காதலின் ஈரத்தை
காதலின் ஸ்பரிசத்தை
காதலின் பேரன்பை. 


நன்றி உயிரோசை..  




Tuesday, February 14, 2012

முதல் கலவியின் மீத இரவு








நேற்றையப் பின்னிரவின்
புணர் உச்சத்தில் நீ மொழிந்த
பிள்ளை மொழியினைப்
பிரதிப்படுத்த எத்தனை முயன்றும்
............
............
பதின் வயதின் சுயமைதுன
இரவுகளே சொற்களில் மிளிர்கிறது.


அவகாசம்







மகோன்னதத்தின் ஓர் அற்றத்தில்
மரங்கொத்திப் பறவையாக
வியாபித்திருக்கிறாய்
ஞாபகச் செதில்களை கொத்திக்
கொத்திச் சுவைக்க

ஓர் கோடை மரத்தின்
உதிர்ந்த இலையாய்,
தப்பிச் செல்லும் சூட்சமத்தை
துளாவிக் கொண்டிருக்கிறேன்

சிறிது அவகாசம் கொடு. 



நிற்க





கனவின் மீள்வருகையென
உன்னை சித்தரிப்பதென்பது
அதனை எளிதொன்றும் அல்ல.

நினைவின் பழுப்பேறிய மரத்தில் அடைபடாது
இலவம் பஞ்சென பிரிந்து செல்வதிலொன்றும்
அதனை துயர் உயிர்ப்பதில்லை.

காத்திருத்தல்
பிழைத்திருத்தமென!